தமிழகம், புதுச்சேரியில் 6 நாட்களுக்கு மழை

1

சென்னை: 'தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 11ம் தேதி வரை மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மதியம் நிலவரப்படி, அதிகபட்சமாக, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது. நீலகிரி வொர்த் எஸ்டேட், கோவை சோலையாரில் தலா 3 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில், சில இடங்களில் மழை பெய்தது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.

இதேபோல், இன்று முதல் 11ம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement