மாஜி மீது வழக்கு பதிய கோர்ட் அதிரடி உத்தரவு

புதுச்சேரி அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்து கடந்த 27 ம் தேதி பதவியை ராஜினாமா செய்தவர் சாய் சரவணன்குமார். இவருக்கும், பா.ஜ., பிரமுகர் உமாசங்கரின் தங்கை பூர்ணிமாவிற்கும் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட நிலப் பிரச்னை, சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுதொடர்பாக அப்போது இருதரப்பும் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். ஆனால், பூர்ணிமா தரப்பு புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.

இந்நிலையில், உமாசங்கர் கடந்த ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்டார். நிலப்பிரச்னை காரணமாகவே இந்த கொலை நடந்ததாக அவரது தந்தை காசிலிங்கம் புகார் தெரிவித்தார்.

இதனிடையே பூர்ணிமா, தனது நிலப் பிரச்னையில் லாஸ்பேட்டை போலீசார் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக, புதுச்சேரி ஜே.எம்.1 கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சேரலாதன், மனுதாரர் வழக்கில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் சாய்சரவணன்குமார் மீது 173 மற்றும் 175 சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது. ஆனால், லாஸ்பேட்டை போலீசார் விசாரிக்க தவறிவிட்டனர்.

அதனால், பூர்ணிமா அளித்த புகாரின் மீது வழக்கு பதிந்து விசாரிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement