வலது காலுக்கு பதிலாக இடது காலில் ஆபரேஷன்; விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அலட்சியம்

41

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவமனையில், தனியார் பஸ் கண்டக்டருக்கு வலது காலுக்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


விழுப்புரம் அடுத்த விநாயகபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, 46; தனியார் பஸ் கண்டக்டர். இவர் கடந்த சில மாதங்களாக வலது காலில் அதிக வீக்கம் ஏற்பட்டு முட்டி வலியால் அவதியடைந்து வந்தார்.


கடந்த 30ம் தேதி கால்வலி அதிகமானதால், விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பரிசோதனை செய்தபோது, அவரது வலது காலில் 2 இடங்களில் ஜவ்வு கிழிந்து இருந்தது தெரியவந்தது.



இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறினர். இதையடுத்து அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று காலை 8:00 மணிக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர், பகல் 12:45 மணிக்கு வார்டுக்கு மாற்றப்பட்டார்.



மாரிமுத்து மயக்கம் தெளிந்து பார்த்தபோது, வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்து கட்டு போடப்பட்டிருந்தது.



இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இடது காலில் மாற்றி அறுவை சிகிச்சை செய்தது குறித்து கேட்டதற்கு டாக்டர்கள், விழிப்பிதுங்கி நின்றனர்.



அங்கிருந்த டாக்டர்களிடம், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு வருத்தம் தெரிவித்த டாக்டர்கள், தவறாக நடந்துவிட்டதாகவும், 18 நாளில் குணமாகிவிடும் எனவும், வரும் 7ம் தேதி வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதாக கூறினர்.



தகவலறிந்த விழுப்புரம் மேற்கு போலீசார் மாரிமுத்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, டாக்டர்களிடம் விசாரித்தனர்.



இதனால், மருத்துவமனையில் பதற்றமான சூழல் நிலவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு டாக்டரின் இந்த அலட்சியப்போக்கு விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement