தலாய் லாமாவுக்கு தனது வாரிசை தேர்ந்தெடுக்க அதிகாரம் இல்லை; மீண்டும் வம்புக்கு இழுக்கும் சீனா!

3


பீஜிங்: "தலாய் லாமாவுக்கு தனது வாரிசை தேர்ந்தெடுக்க அதிகாரம் இல்லை" என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


திபெத் புத்த மதத் தலைவராக இருப்பவர் 14வது தலாய் லாமா. இவர், 'தலாய் லாமாவின் மறுபிறவியை தன்னுடைய 'காடன் போட்ராங்' அறக்கட்டளை தான் தேர்வு செய்யும். தனக்குப் பிறகும் இந்த அறக்கட்டளை தொடர்ந்து செயல்படும். இந்த விவகாரத்தில் தலையிட வேறு யாருக்கும் உரிமை இல்லை,' என கூறியிருந்தார்.


தலாய் லாமாவின் இந்த அறிவிப்புக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. தன்னுடைய வாரிசை புத்த மதத் தலைவர் தலாய் லாமாவினால் மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்று சீனாவுக்கு இந்தியா பதில் அளித்து இருந்தது. இந்நிலையில் இன்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


90 வயதை எட்டிய தலாய் லாமா, மறுபிறவி முறை தொடருமா அல்லது ஒழிக்கப்படுமா என்பதை முடிவு செய்ய எந்த அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை. தலாய் லாமாக்களின் மறுபிறவி அவரிடமிருந்து தொடங்கவில்லை அல்லது அவரால் முடிவடையாது.


புத்தர் சமூகத்தில் மறுபிறவி நடைமுறை 700 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. அடுத்த தலாய் லாமாவை சீனா தான் தேர்ந்தெடுக்க முடியும். இவ்வாறு தலாய் லாமாயின் 90வது பிறந்தநாளான இன்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Advertisement