திருமா இன்றைய கேள்வி: வழக்கம்போல் எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்.,க்கு குறி!

22


சேலம்: தினம், தினம் எதிர்க்கட்சிகளிடம் மட்டுமே கேள்வி கேட்கும் வழக்கம் உள்ள திருமாவளவன், இன்று (ஜூலை 06) அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்.,ஐ குறிவைத்து கேள்வி எழுப்பி உள்ளார்.


இது தொடர்பாக சேலத்தில் நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி என்று சொல்லிக் கொண்டாலும் அது பொருந்தா கூட்டணி. அவர்களால் மனம் ஒத்து களப்பணி ஆற்றுவது, அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஒரு பொருந்தா கூட்டணியை உருவாக்கிக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று சொல்வது நேர், முரணாக இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திரும்பத் திரும்ப கூட்டணி ஆட்சி அமைப்போம் என்கிறார். அதற்கு இதுவரை அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இடம் இருந்து உறுதியான தகவல் இல்லை.


யார் தலைமையில் கூட்டணி?

தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க., ஆட்சி அமையும் என கூறி இருக்கிறார்; இதன் வாயிலாக கூட்டணி ஆட்சியை அவர் மறுக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கு அ.தி.மு.க., உடன்படவில்லை, அதனை ஏற்காது என்ற அறிவிப்பை அவர் இன்னும் வெளியிடவில்லை.


இது தேசிய ஜனநாயக கூட்டணி என பா.ஜ., வினர் சொல்கிறார்கள். அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியா அல்லது பா.ஜ., தலைமையிலான கூட்டணியா?
தேசிய ஜனநாயக தலைமையிலான கூட்டணி என்று சொன்னால், அது பா.ஜ., தலைமையிலான கூட்டணி என்று ஆகிவிடும். அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி என்று சொன்னால், அதற்கு வேறு ஏதும் பெயரை அவர்கள் அறிவிக்க வேண்டும். அதில் இன்னும் குழப்பம் நிலவுகிறது.



முதல்வர் யார்?




முதல்வர் யார் என்பதை தேர்தலுக்கு பின் அமித் ஷா, மோடி முடிவு செய்வார்கள் என்று பா.ஜ.,வினர் சொல்கிறார்கள். இதற்கும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உரிய விளக்கத்தை தருவார் என்று தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக் கின்றனர்.இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement