சாலையில் கொட்டிய ஜல்லிகளால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு

காஞ்சிபுரம்:ஏனாத்துாரில் சாலையோரம் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு உள்ளன.

காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் கிராமத்தில் இருந்து, மருதம் கிராமம் வழியாக, தென்னேரி கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.

இச்சாலை, முதல்வர் சாலைகள் மேம்பாடு திட்டத்தில், சமீபத்தில் தார் சாலையாக செப்பணிடப்பட்டது.

இந்த கிராம சாலை வழியாக, ஒழையூர், கரூர், ராஜகுளம் கிராம மக்கள் தென்னேரி கிராமத்திற்கு செல்வதற்கு, மருதம் கிராமம் வழியாக செல்கின்றனர்.

இதில், ஏனாத்துார் காலனி சுடுகாடு அருகே கிராம சாலை விரிவாக்க பணிக்கு, சாலையோரத்தில் ஜல்லிகள் கொட்டியுள்ளனர். இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஜல்லி கற்கள் மீது செல்லும் போது தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது.

எனவே, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையோரம் கொட்டியுள்ள ஜல்லி கற்களை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement