வல்லுார் அணைக்கட்டு சேதம் மழைக்கு முன் சீரமைக்கப்படுமா?

மீஞ்சூர்:கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள வல்லுார் அணைக்கட்டின் கான்கிரீட் தளங்கள் சேதமடைந்து, சீரமைக்கப்படாமல் உள்ளது.

மீஞ்சூர் அடுத்த சீமாவரம் பகுதியில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே வல்லுார் அணைக்கட்டு உள்ளது. இது, 150 ஆண்டுகள் முன் அமைக்கப்பட்டது.

மழைக்காலங்களில் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், மீஞ்சூரை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் ஆதாரத்திற்கு பயனுள்ளதாக உள்ளது.

கடந்தாண்டு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, ஆர்ப்பரித்து சென்ற உபரிநீர், அங்குள்ள கான்கிரீட் கட்டுமானங்களை சிதைத்தது.

இதில், அணைக்கட்டின் அருகே இருந்த கான்கிரீட் தளங்கள் முற்றிலும் சேதமடைந்தன. இவை, தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளது.

அணைக்கட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிறு சிறு ஓட்டைகள் ஏற்பட்டு, அதன் வழியாக தேங்கியுள்ள தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது.

ஒன்றரை நுாற்றாண்டு கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கும் அணைக்கட்டில், அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால், பலவீனம் அடையும் நிலை ஏற்பட்டு உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.

எனவே, வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன், அணைக்கட்டு பகுதியை முழுமையாக ஆய்வு செய்து, தேவையான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement