மூத்த தமிழறிஞர் சேதுராமன் உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

மூத்த தமிழறிஞர் வா.மு.சேதுராமன் (91) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆண்டநாயகபுரத்தில் 1935ம் ஆண்டு பிறந்த சேதுராமன், சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். விருகம்பாக்கம் சின்மயா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
நெஞ்சத்தோட்டம், ஐயப்பன் பாமாலை, தமிழ் முழக்கம், தாய்மண், சேது காப்பியம் உள்பட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை பதிப்பித்துள்ளார். பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் நிறுவனராக இருந்த இவருக்கு, பெருங்கவிக்கோ, செந்தமிழ்க் கவிமணி போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. திருவள்ளுவர் விருது, கலைமாமணி விருது, சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன், பரமக்குடி கோட்டாட்சியர் (பொறுப்பு) கங்காதேவி, முதுகுளத்தூர் டிஎஸ்பி சண்முகம், முதுகுளத்தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்
அவரது உடல் சொந்த ஊரான ஆண்ட நாயகபுரம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. சார்பு ஆய்வாளர் தலைமையில் 10 போலீசார் தலா 3 முறை 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்ட அவரது உடல் ஆண்டநாயக புரம் கிராமத்தில் உள்ள அவரது தோப்பில் அவரது மனைவியின் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.