பா.ஜ., ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் குறைவு; மாவட்ட தலைவர்கள் தடுமாற்றம்

சென்னை : மத்திய அமைச்சர் அமித் ஷாவை கடுமையாக விமர்சித்து பேசிய, தி.மு.க., துணைப் பொதுச்செயலரும் எம்.பி.,யுமான ராஜாவை கண்டித்து, தமிழக பா.ஜ., சார்பில், சென்னையில் ஏழு இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் அக்கட்சி தொண்டர்கள் அதிகம் பேர் பங்கேற்கவில்லை.
இதனால், முதியோர் என்று கூட பார்க்காமல் போலீசார், பலரை கைது செய்து, தரதரவென்று இழுத்து சென்றனர். இதற்கு, ஒவ்வொரு இடத்திலும், 100 பேருக்கும் குறைவானவர்களே பங்கேற்றதே முக்கிய காரணம். இது, கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அனுமதி இல்லை
சென்னை எழும்பூரில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க., - எம்.பி., ஆ.ராஜா, மத்திய அமைச்சர் அமித் ஷாவை கடுமையாக விமர்சித்து பேசினார். இதை கண்டித்து, தமிழக பா.ஜ., அமைப்பு ரீதியாக, சென்னையில் செயல்படும், ஏழு மாவட்டங்களிலும், இம்மாதம் 1ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தது.
அதன்படி, சேப்பாக்கம், தண்டையார்பேட்டை, அம்பத்துார் தொழிற்பேட்டை, சைதாப்பேட்டை, திருவான்மியூர் உட்படஏழு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இந்த சூழலில் ஒவ்வொரு இடத்திலும், 100க்கும் குறைவான தொண்டர்களே பங்கேற்றனர். இதனால், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, பா.ஜ., வினரை போலீசார் கைது செய்து, தரதரவென்று இழுத்து சென்று, வேனில் ஏற்றி மண்டபங்களில் தங்க வைத்தனர்.
சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியின் வயது முதிர்வையும் பொருட்படுத்தாமல், அவரின் கைகளை பிடித்து, தரதரவென்று போலீசார் இழுத்துச் சென்று, போலீஸ் வேனில் ஏற்றினர்.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
மாநிலத் தலைவராக அண்ணாமலை இருந்தபோது, கட்சி தலைமை எந்த போராட்டம் அறிவித்தாலும், அதிக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்பர். சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு, புதிய தலைவர்களை உள்ளடக்கிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அப்படி இருந்தும், அமித் ஷாவை விமர்சித்து பேசிய ராஜாவை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பலர் வரவவில்லை.
ஆப்சென்ட்
ஒவ்வொரு மாவட்டத்திலும், பூத் கமிட்டி குழுவினர், மண்டல் குழுவினர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் ஆப்சென்ட் ஆகாமல் ஆர்ப்பாட்டத்துக்கு வந்திருந்தாலே, அதிக கூட்டம் இருந்திருக்கும்.
ஆனால், பொறுப்புகளில் உள்ளவர்களே, ஆர்ப்பாட்டத்திற்கு வரவில்லை. இது, போலீசாருக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இதனால் அவர்கள், மூத்த நிர்வாகிகள் என்று கூட பார்க்காமல், அனைவரையும் இழுத்துச் சென்று கைது செய்தனர்.
அனுமதி பெறாமல் நடக்கும் ஆர்ப்பாட்டம் என்றால், மையப் பகுதியில், பல பேரை திரட்டி போராட்டமோ; ஆர்ப்பாட்டமோ நடத்த வேண்டும். அப்போது தான், கூட்டமும் அதிகம் சேரும். போலீசாரும் மென்மையாக டீல் செய்வர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.