பாகூரில் உள் விளையாட்டு அரங்கம் முதல்வர் ரங்கசாமி திறந்து வைப்பு

பாகூர், பாகூரில் 2 கோடியே 53 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள, உள் விளையாட்டு அரங்கத்தை, முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

இந்திய விமானப் பணிகள் ஆணையம் சமூக பொறுப்பு நிதியின் மூலமாக,கடந்த 3 ஆண்டிற்கு முன்பு, 1.25 கோடி ரூபாய் செலவில், பாகூரில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி துவங்கியது.

கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் உள் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

இதையடுத்து, செந்தில்குமார் எம்.எல்.ஏ., முயற்சியால், 44 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவில் கழிப்பறை, 43 லட்ச ரூபாய் செலவில் பாதுகாப்பு மதில் சுவர், பேட்மிட்டன், பேஸ்கெட்பால், கோ-கோ உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவதற்கு ஏற்ற வகையில், 40 லட்ச ரூபாய் செலவில், மர பலகையால் தரை அமைக்கப்பட்டது.

இந்த உள் விளையாட்டு அரங்கத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது.

விழாவில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., வரவேற்றார். அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக, முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு விளையாட்டு அரங்கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அரசு செயலர் கிருஷ்ண மோகன் உப்பு, புதுச்சேரி விமான நிலைய இயக்குனர் ராஜசேகர ரெட்டி, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம், பொதுப்பணித்துறை, கல்வித்துறை அதிகாரிகள், பொது மக்கள், விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகள், விளையாட்டு மற்றும் இளைஞர் நல இயக்கம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.

Advertisement