சி.ஏ., தேர்வில் 45வது ரேங்க்: சாதித்தார் திருச்சி மாணவர்

ஸ்ரீரங்கம்: சி.ஏ., தேர்வில், திருச்சியைச் சேர்ந்த மாணவர், அகில இந்திய அளவில் 45வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம், ராயர்தோப்பு பகுதியைச் சேர்ந்த சீனிவாச ராகவன் - ராதா தம்பதியின் மகன் பார்கவ நரசிம்மன், 24. இவர், மே மாதம் நடந்த சி.ஏ., இறுதி தேர்வில், 30,000 பேரில், அகில இந்திய அளவில் 45வது ரேங்க் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

பார்கவ நரசிம்மன் கூறியதாவது: கடந்த 2020ல் சி.ஏ., பவுண்டேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். 2022ல் சி.ஏ., இன்டர் தேர்ச்சி பெற்றேன். கடந்த மே மாதம் சி.ஏ., இறுதி தேர்வு நடந்தது. இதில், நாடு முழுதும் இருந்து 30,000 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்த தேர்வில், அகில இந்திய அளவில் 50 பேருக்கு மட்டுமே ரேங்க் கொடுப்பர். நான், 45வது ரேங்க் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளேன். நான் தினமும், 13 மணி நேரம் வரை படித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement