வன அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

உடுமலை: மலைவாழ் மக்கள் மேம்பாட்டு குழு நிதி முறைகேடு மற்றும் வேலை வழங்க மறுப்பதை கண்டித்து, வனச்சரக அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம், சின்னாற்றின் கரையில், பிரசித்தி பெற்ற கோடந்துார் கட்டளை மாரியம்மன் கோவில் உள்ளது.

கோவிலுக்கு, அமாவாசை தினங்கள் மற்றும் வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கோடந்துார் மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மலைவாழ் மக்கள் மேம்பாட்டு குழு அமைத்து, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வாகனங்கள் இயக்குதல், மது, பிளாஸ்டிக் தடை சோதனை மற்றும் பாதுகாப்பு பணியில், இக்குழுவை சேர்ந்த இளைஞர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மலைவாழ் மக்களுக்கு வேலை அளித்து வந்த நிலையில், மேம்பாட்டு குழு கணக்கில் வரவு வைக்கப்படும் தொகையை, வனத்துறையினர் முறைகேடு செய்து வருவதோடு, உரிய நேரத்தில் ஊதியம் வழங்கவும் மறுத்தனர்.

இந்நிலையில், திடீரென பலருக்கு வேலை இல்லை என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த மலைவாழ் மக்கள், உடுமலை வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மலைவாழ் மக்கள் கூறுகையில், 'பக்தர்களை அழைத்துச்செல்லும் வாகனத்திற்கு, நபருக்கு 40 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

'வனத்துறை அலுவலர், மேம்பாட்டு குழு தலைவர் இருவர் கையெழுத்துடன், ஊதியம், வாகன பராமரிப்பு, டீசலுக்கு பணம் மற்றும் ஊதியம் வழங்க வேண்டும்.

'இதில், முறைகேடு செய்வதோடு, திடீரென மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை இல்லை என வனத்துறையினர் கூறுகின்றனர். இதனால், குடும்பங்கள் கடுமையாக பாதிக்கும் நிலை உள்ளது' என்றனர்.

Advertisement