வன மஹோத்சவம் - காவேரி கூக்குரல் சார்பில் தமிழகமெங்கும் நடைபெற்ற மரம் நடும் விழாக்கள்

வன மஹோத்சவத்தை முன்னிட்டு, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராமப்புற பகுதிகளில் அரசமரங்களும், விவசாய நிலங்களில் டிம்பர் மரங்களும் 07/07/2025 நடவு செய்யப்பட்டன.

இந்தியாவில் பொது மக்கள் மத்தியில் வனங்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் மரங்கள் வளர்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரம் 'வன மகோத்சவ விழா' கொண்டாடப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் மரம் நடும் விழாக்கள் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில், இந்தாண்டு வன மஹோத்சவ விழாவை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் "ஒரு கிராமம் அரச மரம்" திட்டத்தின் மூலம் மொத்தம் 55 கிராமங்களில் 303 அரச மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மேலும், மரம் சார்ந்த விவசாயம் திட்டத்தின் மூலம் 155 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்களில் 50,000-க்கும் மேற்பட்ட டிம்பர் மரங்கள் நடவு செய்யப்பட்டன.

விவசாய நிலங்களில் தேக்கு, செம்மரம், சந்தனம், மகோகனி, வேங்கை, மலை வேம்பு போன்ற விலை மதிப்புமிக்க டிம்பர் மரங்கள் நடப்பட்டன. இம்மரங்களை வளர்ப்பதன் மூலம் எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

ஈஷா மூலம் கடந்த 25 ஆண்டுகளாக விவசாய நிலங்களில் 12.1 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2024 - 25) தமிழகத்தில் 1.21 கோடி மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் (2025 - 2026) தமிழகத்தில் 1.20 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயித்து, தற்போது வரை 22,55,000 மரங்கள் நடப்பட்டுள்ளது.

மரம் சார்ந்த விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு மண்ணுக்கேற்ற மரங்களை தேர்ந்தெடுப்பது, மரம் நடுவது மற்றும் பராமரிப்பது குறித்த ஆலோசனைகளையும் காவேரி கூக்குரல் இயக்கம் இலவசமாக வழங்குகிறது. விவசாயிகளுக்கு எளிதாக மரக்கன்றுகள் கிடைக்கும் வகையில், ஈஷா நாற்று பண்ணைகளில் டிம்பர் மரக்கன்றுகள் 5 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. டிம்பர் மரங்கள் வளர்க்க விரும்பும் விவசாயிகள், கூடுதல் தகவல்களுக்கு 80009 80009 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement