சாலையில் நிறுத்தும் வாகனங்களால் மேல்பாக்கத்தில் விபத்து அபாயம்

உத்திரமேரூர்:மேல்பாக்கத்தில் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

உத்திரமேரூர் தாலுகா, மேல்பாக்கம் கிராமத்தில், பெருநகர் -- களியாம்பூண்டி சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி சுற்றுவட்டார கிராமத்தினர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், மேல்பாக்கத்தில் செல்லும் இச்சாலையில் இரும்பு தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து, தினமும் 100க்கும் மேற்பட்ட லாரிகள் வந்து செல்கின்றன. அவ்வாறு வரும் லாரிகள் தனியார் தொழிற்சாலை வளாகத்திற்குள் நிறுத்தாமல், சாலையிலே நிறுத்தப்பட்டு வருகின்றன.

இதனால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் சாலையிலே நிறுத்தப்பட்டுள்ள, வாகனங்கள் மீது மோதி விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

மேலும், பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் செல்ல போதிய வழி இல்லாததால் தினமும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து, ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்களும் குறித்த நேரத்திற்கு செல்ல முடியவில்லை.

எனவே, சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, நெடுஞ்சாலைத் துறையினருக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement