வளர்ச்சி பணிகளை முடிக்க சட்டசபை மதிப்பீட்டு குழு அறிவுரை

வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, சட்டசபை மதிப்பீட்டு குழுவினர் அறிவுறுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று, சட்டசபை மதிப்பீட்டு குழு தலைவர் வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமையில், எம்.எல்.ஏ.,க்கள் திருவாடனை கருமாணிக்கம், கந்தர்வகோட்டை சின்னதுரை, ஆரணி சேவூர் ராமச்சந்திரன், சங்கரன்கோவில் ராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.

நேற்று காலை திருத்தணி முருகன் கோவிலில், 31 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் பயிற்சி பள்ளி, திருமண மண்டபங்களை ஆய்வு செய்து, விரைந்து முடிக்க வேண்டுமென, கோவில் இணை ஆணையருக்கு அறிவுறுத்தினர்.

பின், திருவாலங்காடு அடுத்த காவேரிராஜபுரத்தில் உள்ள சிட்கோவில், ரூ.9.50 கோடியில் நடந்து வரும் சாலை மற்றும் கால்வாய் பணிகளை பார்வையிட்டனர்.

அப்போது, திருவாலங்காடு நெடுஞ்சாலையில் இருந்து காவேரிராஜபுரம் சிட்கோ வரை சேதமடைந்த சாலையை கண்டு அதிருப்தி அடைந்து, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு, 'இந்த சாலையை சீரமைக்க, 1.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல், காஞ்சிப்பாடி பகுதியில் குறுவை சிறப்பு திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட இயந்திர நெல் நடவு முறையை பார்வையிட்டனர்.

தொடர்ந்து, திருவள்ளூரில் ரூ.33 கோடியில் நடந்து வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

பின், கலெக்டர் பிரதாப் தலைமையில், சட்டசபை மதிப்பீட்டு குழுவினர் மற்றும் அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில், அரசின் அனைத்து திட்ட பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தினர்.

- நமது நிருபர் குழு -

Advertisement