சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை இல்லை; மாநகராட்சி கமிஷனருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

13


சென்னை: சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்காததற்காக, சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


'சென்னை மாநகராட்சியின், 5வது மண்டலமான ராயபுரத்தில் உள்ள, அங்கீகரிக்கப்படாத, சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, சென்னையை சேர்ந்த வழக்கறிஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன், 2020ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ராயபுரம் மண்டலத்தில் உள்ள சட்டவிரோத, அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மீதும், பிற மண்டலங்களில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி, 2021 டிசம்பரில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை எனக்கூறி, சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு எதிராக, ருக்மாங்கதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, கடந்த ஏப்ரலில் விசாரணைக்கு வந்த போது, மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அறிக்கையை பார்வையிட்ட நீதிபதிகள், 'விதிமீறலில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரங்கள், அறிக்கையில் போதுமானதாக இல்லை.


'இதை பார்க்கும் போது, விதிமீறல் செய்பவர்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்ற தோற்றத்தை அளிக்கிறது. வேண்டுமென்றே விபரங்களை கமிஷனர் அளிக்கவில்லை என்றே தெரிகிறது' என தெரிவித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.



இந்நிலையில், இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தர்மோகன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் கே.பாலாஜி ஆஜராகி, ''மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில் இடம் பெற்ற தகவல்கள் முழுமையாக இல்லை. விபரங்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளன,'' என்றார்.


இதை கேட்ட நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்பதற்காக, சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரனுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.இத்தொகையை கமிஷனரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து, அதை, புற்றுநோய் மையத்துக்கு வழங்கவும் உத்தரவிட்டனர்.



மேலும், விதிமீறல் கட்டடங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து, மாநகராட்சி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வரும் 24ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Advertisement