அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வரட்டும்: திருமாவளவன் விரக்தி

“மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தம்பியாக அரசியல் களத்தில் நான் பணியாற்றியது அ.தி.மு.க., தலைவர்களுக்கு தெரியும்போது, அண்ணன் பழனிசாமிக்கு எப்படி தெரியாமல் போனது,” என, வி.சி., தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சமீபத்தில், சேலத்தில் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தபோது, 'அ.தி.மு.க., - பா.ஜ., இடையே இருப்பது கூட்டணி என சொல்லிக் கொண்டால் கூட, அது பொருந்தா கூட்டணி' என்றார்.
கோவையில் நடந்த 'மக்கள் யாத்ரா' கூட்டத்தில் பழனிசாமி பேசுகையில், 'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி இணக்கமாக இல்லை என்று சொல்ல திருமாவளவன் யார்?' என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், சென்னையில் திருமாவளவன் அளித்த பேட்டி:
அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து நான் வெளியேறிய போது, 'தம்பி திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழ்க' என என்னை வாழ்த்தியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரது தம்பியாக, அரசியல் களத்தில் பணியாற்றியவன்.
இது, அ.தி.மு.க., தலைவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனால், 'அண்ணன்' பழனிசாமிக்கு எப்படி தெரியாமல் போனது என தெரியவில்லை.
அ.தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் இணக்கமான உறவு ஏற்பட வேண்டும் என, நான் எங்கேயும் சொல்லவில்லை.
ஏனென்றால், பா.ஜ.,வால் அ.தி.மு.க., பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணம் தானே தவிர, வேறொன்றும் இல்லை. அ.தி.மு.க., தமிழகத்தில் வலுவாக இருந்தால், பா.ஜ.,வால் இங்கே காலுான்ற முடியாது.
தமிழகத்தில் பா.ஜ., காலுான்றுவது, விடுதலை சிறுத்தைகளுக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்பு ஏற்படுத்தும் என்ற கவலை எனக்கு கிடையாது. ஒட்டுமொத்தமாக, தமிழ் சூழல், தமிழ் சமூகம் பாதிக்கப்படும் என்ற அச்சம் தான் காரணம்.
பா.ஜ.,வால், அ.தி.மு.க.,வுக்கு ஏற்படப்போகும் பாதிப்பை, பழனிசாமி அறியாமல் இருக்கிறார் என கவலைப்படுகிறேன்.
கூட்டணி ஆட்சி குறித்து, இருவேறு கருத்துகளை நான் பேசியதாக பழனிசாமி கூறுகிறார். கூட்டணி ஆட்சி என்பது ஒரு ஜனநாயக கோரிக்கை. அதை என்றைக்கும் முன்வைப்போம்.
என்னைப் பற்றி பழனிசாமி விமர்சித்து பேசுவதற்கு காரணம், நான் சொல்கிற விளக்கம், அவர்களுக்கு பதில் அளிக்கக்கூடிய ஒரு கட்டாயத்தை ஏற்படுத்துகிறது.
அவர்கள் எடுத்த முடிவில், அவர்களுக்கே ஓர் அச்சம் இருக்கிறது. நாம் எடுத்த முடிவு நல்ல முடிவா அல்லது தவறு செய்து விட்டோமா என்றெல்லாம் பழனிசாமியை மீண்டும் மீண்டும் யோசிக்க வைக்கிறது.
அதனால் தான் இப்படி ஒரு விளக்கத்தை, பொதுவெளியில் அளிக்க வேண்டிய நெருக்கடிக்கு பழனிசாமி ஆளாகியுள்ளார். அ.தி.மு.க., மீது, நமக்கு எந்த பகை உணர்ச்சியும், வெறுப்புணர்வும் கிடையாது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழிநடத்திய கட்சி என்பதாலும், தோழமை கட்சி என கருதுவதாலும், என் கருத்தை தெரிவித்தேன். எந்த தோழமையும் வேண்டாம் என, அவர்கள் கருதினால், நான் அதைப்பற்றி பேசப் போவதில்லை.
வரும் சட்டசபை தேர்தலில், 210 தொகுதிகளில் வெல்வோம் என பழனிசாமி கூறியுள்ளார். அவர்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் வரட்டும்.
பொதுமக்களின் தீர்ப்பை ஏற்று தான் ஆக வேண்டும். பா.ஜ.,வால் அ.தி.மு.க., பாதிப்பை சந்தித்து விடக்கூடாது; பின்னடைவை சந்தித்து விடக்கூடாது.
அ.தி.மு.க., வாயிலாக, பா.ஜ., தமிழகத்தில் காலுான்றி விடக்கூடாது என்ற கவலை மட்டுமே இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -





