ரிதன்யா வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க கோரி தந்தை மனு

கோவை:'ரிதன்யா வழக்கில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்' என, ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, மேற்கு மண்டல ஐ.ஜி.,யிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

திருப்பூர், அவிநாசியை சேர்ந்த இளம்பெண் ரிதன்யா, 27, கணவர் வீட்டார் கொடுமையால், தந்தைக்கு ஆடியோ பதிவு அனுப்பி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சேவூர் போலீசார், கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவியை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, மேற்கு மண்டல ஐ.ஜி.,யிடம் நேற்று கோரிக்கை விடுத்தார்.

அவர் கூறியதாவது:

சாதாரண தற்கொலை, கொடுமை வழக்கு பிரிவுகள் மட்டுமே பதியப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனை, ஆடியோ அறிக்கைகள் கிடைக்காததால், தாமதம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், விசாரணை அதிகாரி மீது சந்தேகம் ஏற்படுகிறது. வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளேன்.

இவ்வாறு கூறினார்.

Advertisement