பார்வையற்ற பயணியர் உதவிக்காக 'ஆன் போர்டு' திட்டம் விஸ்தரிப்பு

பெங்களூரு: பி.எம்.டி.சி., பஸ்களில் செல்லும், பார்வையற்ற பயணியர் வசதிக்காக, சோதனை முறையில் செயல்படுத்திய புதிய தொழில் நுட்பம் கொண்ட 'ஆன் போர்டு' திட்டம், வெற்றி அடைந்ததால் திட்டம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி அளித்த பேட்டி:

தொழில் நுட்ப நிறுவனமான கான்டிமென்டல், பி.எம்.டி.சி., ஒருங்கிணைந்து பார்வையற்ற பயணியருக்காக, 'ஆன்போர்டு' திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு டில்லி ஐ.ஐ.டி., மற்றும் ரைஸ்டு லைன்ஸ் பவுண்டேஷன் ஒத்துழைப்பு அளித்தன.

பார்வையற்ற நபர்கள், அரசு பஸ்களில் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில், புதிய தொழில்நுட்ப சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சோதனை முறையில், 25 பி.எம்.டி.சி., பஸ்களில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது வெற்றி அடைந்ததால், மேலும் 100 பஸ்களுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் போக்குவரத்து வசதி கிடைக்க வேண்டும் என்பது, திட்டத்தின் நோக்கமாகும்.

மத்திய அரசின் எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், அறிவியல் தொழில் நுட்பத்துறை உதவியில், ஐ.ஐ.டி., டில்லியில் 'ஆன்போர்டு' சாதனம் வடிவமைக்கப்பட்டது. இந்த சாதனம் பார்வையற்ற நபர்கள், பஸ் வழித்தட எண்களை அடையாளம் காண, பஸ்சில் உள்ள ஸ்பீக்கர் ஆடியோ அறிவிப்புகளை பயன்படுத்தி, பஸ்கள் வருவதை கண்டறிந்து, ஏறவும், இறங்கவும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பி.எம்.டி.சி., நிர்வாக இயக்குநர் ராமசந்திரன் அளித்த பேட்டி:

மக்களுக்கு தரமான அரசு போக்குவரத்து வசதிகளை செய்வதன் மூலம், மற்ற முக்கிய நகரங்களுக்கு சமமாக, பெங்களூரை கொண்டு வர 'ஆன் போர்டு' திட்டம் உதவியாக இருக்கும்.

சில மாதங்களுக்கு முன், பெங்களூரின் எனேபல் இந்தியா ஒருங்கிணைப்பில், ரைஸ்டு லைன்ஸ் பவுண்டேஷன், ஆன் போர்டு சாதனங்களை, பார்வையற்ற மாணவர்களுக்கு அளித்து சோதனை நடத்தியது.

இது வெற்றிகரமாக செயல்பட்டதில், பி.எம்.டி.சி., பஸ்களில் பார்வையற்ற பயணியருக்காக பயன்படுத்தப்பட்டது. மழை, காற்று, வெப்பம், துாசி போன்ற அனைத்து சூழ்நிலைகளிலும் நன்றாக செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement