அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு தேசிய விருது

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் 2024ம் ஆண்டில் 30 ஆயிரத்து 47 யூனிட்கள் ரத்தம் தானமாக பெற்று தேசிய விருது பெற்றதாக டீன் அருள் சுந்தரேஷ் குமார் தெரிவித்தார்.

உலக ரத்ததான தினத்தையொட்டி ரத்தக்கொடையாளர்களை கவுரவிக்கும் வகையில் 200 அமைப்புகளுக்கு கேடயம், சான்றிதழை டீன் வழங்கினார். அவர் பேசியதாவது:

2024ல் அதிக அளவாக 30 ஆயிரத்து 47 யூனிட்கள்ரத்தம் தானமாக பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளோம். தேசிய அளவில் விருது கிடைத்தது. அதிகளவில் ரத்த தானம் செய்த கல்லுாரிகளில் அமெரிக்கன் கல்லுாரி முதலிடம், வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி 2ம் இடம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி 3ம் இடம் பெற்றன.

இந்த ஆண்டில் 208 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அரியவகை 'ஓ நெகட்டிவ் பாம்பே' ரத்த வகையைச் சேர்ந்த 29 ரத்தக் கொடையாளர்கள் கண்டறியப்பட்டு அவசர தேவைக்கு தொடர்ந்து ரத்த தானம் தந்து உதவுகின்றனர்.

ரத்தத்தை சிவப்பணு, பிளாஸ்மா, தட்டணுக்கள்என பல்வேறு வகையாக பிரித்து வழங்குவதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 7341 யூனிட்கள், தலசீமியா நோயாளிகளிக்கு 700, பொது அறுவை சிகிச்சையில் 9000, குழந்தைகள் நலப்பிரிவில் 2014, இதய அறுவை சிகிச்சை பிரிவில் 5780, சிறுநீரக பிரிவில் 960, அவசர விபத்து சிகிச்சை பிரிவில் 6000 யூனிட்கள் ரத்தம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

ஆர்.எம்.ஓ.,க்கள் சரவணன், முரளிதரன் பங்கேற்றனர். ரத்த வங்கி தலைவர் சிந்தா ஏற்பாடுகளை செய்தார். மாவட்ட திட்ட மேலாளர் ஜெயபாண்டி நன்றி கூறினார்.

Advertisement