4 பேருக்கு நியமன எம்.பி., பதவி: அறிவித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

3

புதுடில்லி: 4 பேருக்கு நியமன எம்.பி., பதவியை ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவித்து உள்ளார். ராஜ்யசபா எம்.பி.,யாக அறிவிக்கப்பட்டுள்ள 4 பேருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


ராஜ்யசபாவில் மொத்தம் 245 எம்.பி.,க்கள் உள்ளனர். இதில், 233 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மீதியுள்ள 12 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள்.

அதில், கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில்துறை, சமூக சேவை, பத்திரிகையாளர் எனப் பலதரப்பட்ட ஆளுமைகளின் பெயர்களை மத்திய அரசு பரிந்துரை செய்யும். அதனை ஏற்று ஜனாதிபதி, அந்த பட்டியலில் உள்ளவர்கள் ராஜ்யசபா எம்.பி.,யாக ஒப்புதல் வழங்கி அறிவிப்பார்.



அவர்கள் ராஜ்யசபா தலைவர் பொறுப்பு வகிக்கும் துணை ஜனாதிபதி முன்னிலையில் எம்.பியாக பதவியேற்பர். தற்போது, 4 பேருக்கு நியமன எம்.பி., பதவியை ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவித்து உள்ளார்.

அதன் விபரம் பின்வருமாறு:* மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கை அரசு தரப்பில் முன் நின்று நடத்திய வக்கீல் உஜ்வல் நிகம்.



* கேரளாவைச் சேர்ந்த கல்வியாளர் சதானந்தன் மாஸ்டர்.


* முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்ளா.


* வரலாற்று ஆய்வாளர் மீனாட்சி ஜெயின் ஆகிய 4 பேரும் ஜனாதிபதியால் ராஜ்யசபாவுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


இவர்கள் விரைவில் ராஜ்யசபா தலைவர் பொறுப்பு வகிக்கும் துணை ஜனாதிபதி முன்னிலையில் எம்.பியாக பதவியேற்பர்.


பிரதமர் மோடி வாழ்த்து



நியமன எம்.பி., ஆக அறிவிக்கப்பட்டுள்ள 4 பேருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: சட்டத்துறையிலும், நமது அரசியலமைப்பிலும் உஜ்வால் நிகாமின் அர்ப்பணிப்பு முன்மாதிரியானது. அவரை ராஜ்யசபா எம்.பி.,யாக ஜனாதிபதி நியமித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது



சதானந்தன் மாஸ்டர் ஜனாதிபதியால் ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.
முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்ளா ஜனாதிபதியால் ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்டதில் மகிழ்ச்சி. அவரது தனித்துவமான கண்ணோட்டங்கள் பார்லி., நடவடிக்கைகளை பெரிதும் வளப்படுத்தும்.


வரலாற்று ஆய்வாளர் மீனாட்சி ஜெயின் ஜனாதிபதியால் ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு அறிஞர், ஆராய்ச்சியாளர் மற்றும் வரலாற்றாசிரியர் என தன்னை வேறுபடுத்திக் கொண்டுள்ளார். அவரது பார்லி., எம்.பி., பதவிக்காலத்திற்கு வாழ்த்துக்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement