85 வயதிலும் சும்மா இருக்க மனமில்லை லட்சுமியம்மாவுக்கு!

1

கோவை: ''வீட்ல சும்மா இருக்கக் கூடாதுன்னு, தெனமும் இங்க வந்து யாவாரத்த பாக்கறேன் சாமி,'' என்று சொல்கிறார், 85 வயதான லட்சுமி அம்மா.


ராஜ வீதியில் உள்ள தியாகி குமரன் மார்க்கெட்டில், பழ வியாபாரம் இவருக்கு.

எத்தன வருஷமா இங்க வியாபாரம் பாத்துட்டு இருக்கீங்க?

''50 வருஷத்துக்கு மேல இருக்கும் சாமி. காலையில சீக்கிரம் வந்துருவேன். என்ன... கொஞ்சம் நடக்க முடியல. அப்படியும் தட்டுத் தடுமாறி நடந்துட்டு இருக்கேன்.

இலந்தபழ பாட்டின்னா இந்த ஊருக்கே தெரியும். வெளிநாட்டுல இருந்து இங்க வந்த பலபேரு, எங்கிட்ட இலந்தபழம் வாங்கி சாப்பிட்டிருக்காங்க,''

பேச்சின் இடையே, ''கொஞ்சம் இருங்க...,'' என்று தராசு எடுத்து விட்டு வந்து அமர்ந்தார்.

''வருமானமெல்லாம் எப்படி?''

''ஒரு நாளைக்கு இவ்வளவு தான் வருமானம் ஆகும்னு சொல்ல முடியாது.

பல வருஷங்களுக்கு முன்னால ரொம்ப நல்லா யாவாரம் ஆச்சு. இப்ப அப்படியே கொறஞ்சு போச்சு சாமி.

''ஓய்வு எடுக்கலாம்னு எப்பவாவது நெனச்சிருக்கீங்களா?''

''வீட்ல சும்மா உக்கார மனசில்லாம இங்க வந்துர்றேன். எனக்கு மூனு பொண்ணுங்க. மூனு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சுட்டேன். மொத பொண்ண கட்டிக் குடுத்ததுக்கு பெறகு, வீட்டுக்காரரு தவறிட்டாரு. அதுக்குப் பெறகு இப்படித்தான் வாழ்க்கை ஓடுது,''

''பணம் சேர்த்து வைக்கற பழக்கம் உண்டா?''

''ரொம்ப வருஷத்துக்கு முன்னால, ஒரு பேங்க்குல பணம் போட்டுட்டு வந்தேன். அந்த ஆபிசரும் எறந்து போயிட்டாரு.

பேங்க் புஸ்தகமும் தொலைஞ்சு போனதால, எவ்வளவு பணம் சேத்து வெச்சோம்னு தெரியாம போச்சு சாமி,''

கண்கள் கலங்க இதை சொன்ன லட்சுமியம்மா, தொடர்ந்து வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்தார்.

Advertisement