தன்னம்பிக்கை நிறைந்த இந்தியா தெரிகிறது: வழியனுப்பு விழாவில் சுபான்ஷூ சுக்லா பெருமிதம்


புதுடில்லி: ''இன்றைய இந்தியா சர்வதேச விண்வெளி விண்வெளியில் இருந்து பார்க்கும்போது, லட்சியம் உள்ளதாகவும், அச்சமற்றதாகவும், தன்னம்பிக்கையாகவும், பெருமை நிறைந்தாகவும் தெரிகிறது,'' என சர்வதேச விண்வெளி மையத்தில் வழியனுப்பு விழாவில் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா கூறினார்.


சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா தலைமையிலான குழுவினர், நாளை( ஜூலை 14) மாலை 4:35 மணிக்கு பூமிக்கு திரும்புகின்றனர் என அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.


இதனையடுத்து விண்வெளி மையத்தில் நடந்த வழியனுப்பு விழாவில் சுபான்ஷூ சுக்லா பேசியதாவது: இந்த பயணம் நம்ப முடியாத வகையில் அமைந்தது. இதில் ஈடுபட்டோரின் கடுமையான உழைப்பு காரணமாக இந்த பயணம் அற்புதமாக அமைந்தது.


எனது விண்வெளி பயணம் முடிவுக்கு வந்தாலும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது என்ற இந்தியாவின் திட்டமும் நீண்ட தூரத்தில் உள்ளது. நாம் ஒரு தீர்மானம் எடுத்தால், நட்சத்திரத்தையும் எட்ட முடியும் என்பதை நான் உறுதியுடன் தெரிவிக்கிறேன்.


41 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் ராகேஷ் சர்மா, விண்வெளிக்கு சென்று, அங்கிருந்து இந்தியா எப்படி இருந்தது என்று எங்களிடம் கூறினார். இன்று இந்தியா எப்படி இருக்கிறது என்பதை மக்கள் அறிய விரும்புகிறார்கள் என்பதையும் தெரிவித்தார்.


இன்றைய இந்தியா விண்வெளியில் இருந்து பார்க்கும் போது, லட்சியம் உள்ளதாகவும், அச்சமற்றதாகவும், தன்னம்பிக்கையாகவும், பெருமை நிறைந்தாகவும் தெரிகிறது. இன்றைய இந்தியா, முழு உலகத்தையும்விட சிறப்பாக தெரிகிறது. விரைவில் சந்திப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement