நான்காவது சுற்றில் திவ்யா * செஸ் உலக கோப்பையில்...

பதுமி: உலக கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் ஹம்பி, திவ்யா நான்காவது சுற்றுக்கு முன்னேறினர்.
ஜார்ஜியாவில் பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் நடக்கிறது. 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்கின்றனர். 'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.
'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் மூன்றாவது சுற்று நடந்தது. இந்தியாவின் 'சீனியர்' வீராங்கனை ஹம்பி, போலந்தின் கிளாடியாவை சந்தித்தார். முதல் போட்டி 'டிரா' ஆனது. நேற்று இரண்டாவது போட்டி நடந்தது. வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி, 44வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து ஹம்பி 1.5-0.5 என வென்று, நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் இளம் வீராங்கனை திவ்யா, முதல் போட்டியில் செர்பியாவின் இன்சாக்கை வென்றார். நேற்று இரண்டாவது போட்டி 'டிரா' ஆனது. முடிவில் திவ்யா 1.5-0.5 என வெற்றி பெற்றார்.
மற்ற இந்திய வீராங்கனைகள் வைஷாலி, ஹரிகா, வந்திகா, இரு போட்டி முடிவில் 1.0-1.0 என சம நிலையில் உள்ளனர்.

Advertisement