இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நுாலிழையில் தப்பிய ஈரான் அதிபர்

டெஹ்ரான்: இஸ்ரேல் கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் காலில் காயத்துடன், நுாலிழையில் உயிர் தப்பியதாக, அந்நாட்டின் ராணுவத்துக்கு சொந்தமான பார்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பது தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்று கூறி, இஸ்ரேல் ஜூன் ௧௩ல் தாக்குதல் நடத்தியது; ஈரானும் பதிலடி தந்தது. 12 நாட்கள் இரு தரப்பிலும் மாறி மாறி தாக்குதல் தொடர்ந்தது.
லெபனான் பாணி
இதில் ஈரானின் அணுசக்தி வளாகங்கள் அழிக்கப்பட்டன. முக்கிய ராணுவ தளபதிகள், அணு விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் குறித்த புதிய தகவலை ஈரான் புரட்சிகர ராணுவ படைக்குச் சொந்தமான பார்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது.
அதில் கூறியுள்ளதாவது:
மேற்கு ஆசிய நாடான லெபனானின் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நசருல்லாவை பெய்ரூட்டில், இஸ்ரேல் விமானப் படைகள் வான் வழி தாக்குதல் வாயிலாக கடந்தாண்டு கொன்றன.
அதே பாணியில் ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானை ஜூன் 16ல் கொல்ல இஸ்ரேல் விமானப் படை முயற்சித்தது.
மேற்கு டெஹ்ரானின் ஒரு அடுக்குமாடி கட்டடத்தின் கீழ் தளத்தில் ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் ஈரான் அதிபர், பார்லிமென்ட் சபாநாயகர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோர் பங்கேற்றனர்.
அவசரகால வழி
அப்போது கட்டடத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளை குறி வைத்து, ஆறு ஏவுகணைகளை இஸ்ரேல் ஏவியது. இதனால் காற்றோட்டம் தடைபட்டது; மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இருப்பினும் முன்னெச்சரிக்கையாக அவசரகால வழி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது வழியாக ஈரான் அதிபர் வெளியேற்றப்பட்டார்.
இந்த தாக்குதலில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவரின் இருப்பிட விபரம் துல்லியமாக எப்படி இஸ்ரேலுக்கு தெரிந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.