ஊராட்சிகளில் சுத்திகரிப்பின்றி குடிநீர் சப்ளை செய்யும் போக்கு... தொடர்கிறது: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை

மாவட்டத்தில் 306 ஊராட்சிகள் உள்ளன. ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் முடிவுற்று தனி அதிகாரிகளை கொண்டு செயல்படுகின்றன.ஊராட்சி பகுதிகளில் கிணறு, நீரோடை, நீர்த்தேக்கம், மேல்நிலைத் தொட்டி ஆழ்துளை கிணறு உள்ளிட்டவைகள் மூலம் குடிநீர் சப்ளையாகிறது. இந்நிலையில் இரு வாரங்களுக்கு ஒரு முறை குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட வேண்டும்.

அதே நேரத்தில், ஊராட்சிகளின் குடிநீர் ஆதாரங்களில் குளோரின் பயன்படுத்தி குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சப்ளை செய்ய வேண்டும் என்பது முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. குறிப்பாக மலைப்பகுதிகளில் ஈர்ப்பு விசையின் மூலம் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இத்தகைய நீர் நிலைகள் மாசடைந்தும், புழு பூச்சிகளுடன் சுகாதாரக் கேடாக குடிநீர் சப்ளையாகும் நிலை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். சமவெளி பகுதியில் உள்ள ஊராட்சிகளிலும் இதே நிலை நீடிக்கிறது. தெருக்களுக்கு சப்ளையாகும் குடிநீர் பைப் லைன்கள் சாக்கடையில் செல்வதால் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. ஆப்பரேட்டர்கள், ஊராட்சி செயலர்கள் கண்டுகொள்வதில்லை. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் வழிகாட்டு முறைபடி இரு வாரங்களுக்கு ஒரு முறை தூய்மை செய்வதும், குளோரின் பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement