அபாய புளிய மரத்தில் கிளைகளை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

சித்தாமூர்:பழவூரில், விபத்து ஏற்படுத்தும் நிலையில் சாலையோரத்தில் உள்ள புளிய மரங்களின் கிளைகளை அகற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சித்தாமூர் அருகே பழவூர் கிராமத்தில், மதுராந்தகம் - சூணாம்பேடு மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இது புதுச்சேரி, திண்டிவனம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலை.
தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள், இச்சாலையில் செல்கின்றன.
சாலைக்கு அருகே நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான புளியமரங்கள் உள்ளன.
இதில் சில புளியமரங்கள், சாலையை ஒட்டியே உள்ளதால், முன்னே செல்லும் வாகனத்தை பிற வாகனங்கள் முந்திச் செல்ல முற்படும் போதும் விபத்து ஏற்பட வாய்ப்புஉள்ளது.
மேலும், இங்கு மின் விளக்கு இல்லாததால், இரவு நேரத்தில் புதிதாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலையோரம் உள்ள புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளாகும் அபாய நிலை உள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக, சாலையோரத்தில் உள்ள புளியமரங்களின் கிளைகளை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.