-மழை நீர் லேசாக தேங்குவது வெள்ளம் அல்ல அமைச்சர் பர்வேஷ் வர்மா விளக்கம்

புதுடில்லி:''தலைநகர் டில்லியில் பெரும்பாலான வடிகால்வாய்கள் சீராக இருக்கின்றன. சாலைகளில் மழைநீர் லேசாக தேங்குவதை வெள்ளம் என சொல்லக்கூடாது'' என, நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா கூறினார்.

யமுனா நதியில் பல்லா பகுதியை, நேற்று ஆய்வு செய்த, அமைச்சர் பர்வேஷ் வர்மா, நிருபர்களிடம் கூறியதாவது:

சாலைகளில் தேங்கும் மழைநீர் சில நிமிடங்களில் வடிந்து விடுகிறது. அதை, வெள்ளம் தேங்கியது என சொல்லக் கூடாது. டில்லி மாநகரில் பெரும்பாலான வடிகால்வாய்கள் சீராக இருக்கின்றன.

ஐந்து மணி நேரம் அல்லது அதற்கு மேலும் சாலைகளில் தேங்கியிருந்தால் அதை வெள்ளம் என கூறலாம்.

சாலைகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க துறைகளிடையே கடுமையான கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பருவமழை உச்சநிலை அடைவதற்கு முன், யமுனை நதி நிலையை மதிப்பிடும் பணி நடக்கிறது. வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் வடிகால் வசதிக்கு பொறுப்பான துறைகளின் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

நீரோட்டம், மற்றும் கரையின் நிலை ஆகியவற்றை யமுனை நதியில் படகில் சென்று ஆய்வு செய்தேன். டில்லிக்குள் நுழையும் யமுனை நதி நீரின் தரத்தை அறிவியல் பூர்வமாக பரிசோதிக்க பல்லா பாயின்ட்டில் இருந்து நீர் மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.

மழைக்காலதில், தண்ணீர் தேங்குவது தொடர்பான புகார்களுக்கு விரைவான தீர்வு கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement