மகாராஷ்டிராவில் ரூ.1.50 கோடி கொள்ளை தப்பி வந்த 6 பேர் கேரளாவில் சிக்கினர்

1

பாலக்காடு; மகாராஷ்டிராவில், 1.50 கோடி ரூபாய் கொள்ளையடித்து, கேரளாவுக்கு தப்பி வந்த ஆறு பேர் கொண்ட கும்பலை, கேரளா போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம், சத்தாரா மாவட்டம் புஞ்சு போலீஸ் ஸ்டேஷன் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து, 1.50 கோடி ரூபாய் கொள்ளையடித்த கும்பல், கேரளாவுக்கு தப்பி வந்துள்ளதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கேரளா வயநாடு மாவட்ட எஸ்.பி., தபோஷ் பசுமாதரி அறிவுரையின்படி, சிறப்பு கிளை டி.எஸ்.பி., அப்துல் கரீமின் தலைமையில், ஹைவே போலீசார், கல்பற்றை போலீசார் மற்றும் சிறப்பு படையினர், நேற்று முன்தினம் இரவு கைநாட்டி என்ற பகுதியில் வாகனச்சோதனை நடத்தினர்.அப்போது அவ்வழியாக வந்த கே.எல்.,10 ஏ.ஜி., 7200 என்ற கேரளா எண் கொண்ட, இன்னோவா காரை தடுத்து நிறுத்தி நடத்திய விசாரணையில், அதிலிருந்த 6 பேர் மகாராஷ்டிரா கொள்ளையர் கும்பல் என்று தெரிந்தது.

அவர்களை கைது செய்து நடத்திய விசாரணையில், பாலக்காடு மாவட்டம் சிறக்கடவு பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் 32, காஞ்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் 27, பொய்ப்புள்ளி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் 47, காரேக்காட்டுபரம்பு பகுதியியைச் சார்ந்த விஷ்ணு 29, ஆலத்தூர் வாவுளியாபுரம் பகுதியைச் சேர்ந்த கலாதரன் 33, ஆகியோர் என்பதும்

இவர்கள் கேரளாவில் கொள்ளை, கொலை முயற்சி, போதை மருந்து கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளவர்கள் என்பதும் தெரிந்தது.

மேலும் இவர்கள் கொள்ளையடித்த வந்த பணம், மற்றொரு கும்பலிடம் பரிமாறியுள்ளதும் தெரிந்தது. கேரளா போலீசார், தொடர் நடவடிக்கைகளுக்குப் பிறகு கும்பலை, மகாராஷ்டிரா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement