3 மாதமாக தண்ணீர் பற்றாக்குறை ஏழுர் பகுதி மக்கள் சாலை மறியல்

நாமக்கல்: நாமக்கல் வட்டம், புதுச்சத்திரம், ஏழூர் ஊராட்சி ஒன்றியம், காட்டுக்கொட்டாய், புதிய காலனி, பராசக்தி நகர் பகுதியில், 900க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில், பராசக்தி நகரில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி

அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுநாள் வரை மக்கள் பயன்பாட்டிற்கு விடவில்லை; புதிய ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும்; மூன்று மாதங்களாக தண்ணீர் பற்றாக்குறையால் மிகவும் சிரமத்திற்குள்ளாவதாக கூறி, ஏழூர்-பெரியமணலி சாலையில், நேற்று காலை, 7:00 மணிக்கு காலி குடங்களை வரிசையாக அடுக்கி வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் கோகிலா, பி.டி.ஓ., முத்துலட்சுமி ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 'கோரிக்கையை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என, கூறியதையடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement