தேர்தல் பயத்தால் ஊர் ஊராக செல்லும் முதல்வர்: நயினார் நாகேந்திரன் கிண்டல்

7


திருநெல்வேலி: '' தேர்தல் குறித்து பா.ஜ, கூட்டணிக்கு எந்த பயமும் இல்லை. முதல்வர் தான் பயந்து ஊர் ஊராக சுற்றி வருகிறார்,'' என பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலி பா.ஜ. அலுவலகத்தில் மூன்று லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட 18 தொகுதிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்தது. இதில் பா.ஜ., மூத்த தலைவர்கள் எச். ராஜா, கரு நாகராஜன், பேராசிரியர் சீனிவாசன், நாகர்கோவில் எம்.எல்.ஏ.காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிறகு நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை ஸ்டாலின், தேர்தலுக்காக துவக்கி உள்ளார். மகளிர் உரிமைத்தொகை மூன்று ஆண்டுகளாக தரவில்லை. லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தான் வழங்கினார்கள். தி.மு.க.,வினர் ஆட்சியை இழந்து விடுவோம் என்ற விரக்தியில் உள்ளனர். போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.


தமிழகத்தில் போலீசாரின் மனதிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இ.பி.எஸ்., பிரசாரத்திற்கு வரும் கூட்டம் அதிகரித்துள்ளது. மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடந்தது. இது ஆட்சி மாற்றத்தின் அறிகுறி. விஜய் கட்சி எங்கு வேண்டுமானாலும் மாநாடு நடத்தலாம்.
வருமானவரி சோதனைக்கும் பா.ஜ.,வுகும் எந்த சம்பந்தமும் இல்லை.


தி.மு.க., கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் கூட்டணியில் பங்கு கேட்பது என்பதில் உறுதியாக உள்ளனர். செஞ்சிக்கோட்டையை யுனெஸ்கோ சின்னமாக அறிவிப்பதற்கு காரணமாக இருந்தவர் பிரதமர் மோடி.


காமராஜர் குறித்து முன்னாள் முதல்வர் கருணாநிதி பேசிய வார்த்தைகள் இப்போது கூறினால் அசிங்கமாகிவிடும். காமராஜரை கருணாநிதி கேவலமாக பேசியுள்ளார்.


இ.பி.எஸ்., சொல்வதெல்லாம் பொய் என ஸ்டாலின் கூறுகிறார். ஸ்டாலின் சொல்வதெல்லாம் உண்மை என்று ஆகிவிடுமா? அவர் சொல்வதே பொய்தான். பா.ஜ., கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளன. வருவதற்கு இன்னும் காலம் உள்ளது. தேர்தல் குறித்து பா.ஜ, கூட்டணிக்கு எந்த பயமும் இல்லை. முதல்வர் தான் பயந்து ஊர் ஊராக சுற்றி வருகிறார். தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் பா.ஜ., கூட்டணியின் குறிக்கோள். அதற்காக செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Advertisement