நொய்யல் ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

தொண்டாமுத்தூர்; காந்திபார்க்கை சேர்ந்த தண்டபாணி என்பவரது மகன் கார்த்திக், 28. இவர் கோவை மாநகராட்சியில், தற்காலிக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது சித்தப்பாவின் மகனான தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் வசந்த், மாதேஷ் ஆகியோருடன், சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு நேற்று சென்றார்.

அங்கு நொய்யல் ஆற்றில், நால்வரும் இறங்கி குளித்துக் கொண்டு இருந்தனர். இதில் மூவர் மேலே கரைக்கு வந்த நிலையில், கார்த்திக் நீரில் மூழ்கியுள்ளார். நண்பர்கள், தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், ஆற்றில் இறங்கி கார்த்திக்கை சடலமாக மீட்டனர். விசாரணையில், சேற்றில் சிக்கியதால், கார்த்திக் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement