திருப்பரங்குன்றம் மலை விவகார வழக்கு: விசாரணையை ஒத்திவைத்தார் 3வது நீதிபதி

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இரு நீதிபதிகள் மாறுபட்ட உத்தரவு பிறப்பித்ததால் 3 வது நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அவர் விசாரணையை ஒத்திவைத்தார்.

ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருப்பரங்குன்றம் மலையின் உரிமையாளர் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம். மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் தர்காவிற்கு தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர மலையிலுள்ள பிற பகுதிகள் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானவை என ஆங்கிலேயர் ஆட்சியின் போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். இதுபோல் பரமசிவன் என்பவர் மனு செய்தார்.

ஹிந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் ராமலிங்கம், ''பக்ரீத் பண்டிகையையொட்டி கோயிலுக்குச் சொந்தமான பாதையை மறைத்து நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தர்கா நிர்வாகிகள், முஸ்லிம்கள் முயற்சிக்கின்றனர். தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்,'' என பொதுநல மனு தாக்கல் செய்தார்.

திருப்பரங்குன்றம் அப்துல் ஜாபர், ''தர்கா, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக சாலை, தெருவிளக்கு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்,'' என மனு செய்தார்.

திருப்பரங்குன்றம் ஒசீர்கான், ''மலையிலுள்ள தர்கா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தில் அதிகாரிகள் தலையிடக்கூடாது.

அப்பகுதியில் சீரமைப்பு, கட்டுமானப் பணி மேற்கொள்வதை தடுக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்,'' என மனு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்சித்தமூர் ஜினா காஞ்சி ஜெயின் மடம் ஸ்வஸ்தி ஸ்ரீலட்சுமிசேனா பட்டாரக் பட்டாச்சாரிய மகா சுவாமிகள், ''திருப்பரங்குன்றம் மலையில் சமணர்கள் வாழ்ந்ததற்கான படுகைகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் உள்ளன. அவற்றை பாதுகாக்க மலையை சமணர் குன்று என அறிவிக்க உத்தரவிட வேண்டும்,'' என மனு செய்தார்.

இவ்வழக்குகளை ஏற்கனவே நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.

ஜூன் 24 ல் நீதிபதி ஜெ.நிஷாபானு பிறப்பித்த உத்தரவு: சுப்பிரமணிய சுவாமி கோயில், சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவின் உரிமைகளை சிவில் நீதிமன்றங்கள் தீர்மானித்துள்ளன. கோயிலுக்குரிய உரிமைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு இல்லை. மத நடைமுறையின் ஒரு பகுதியான விலங்குகளை பலியிடுவதை தடை செய்ய எந்தச்சட்டமும் இல்லாத நிலையில், அதை தடுக்கும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. பொது அமைதி, நல்லிணக்கத்தை பேண வேண்டும். அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தரவிட்டார்.

நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு: திருப்பரங்குன்றம் மலையை திருப்பரங்குன்றம் மலை என்று மட்டுமே தொடர்ந்து அழைக்க வேண்டும். சிக்கந்தர் மலை, சமணர் குன்று என அழைக்கக்கூடாது. ரம்ஜான், பக்ரீத் மற்றும் பிற இஸ்லாமிய பண்டிகைகளின் போது கந்துாரி விலங்குகளை பலியிடுவது,

பிரார்த்தனை செய்வது நடைமுறையில் இருந்ததை நிறுவ தர்கா நிர்வாகம் சிவில் நீதிமன்றத்தை அணுக வேண்டும். சந்தனக்கூடு திருவிழாவை தர்கா நடத்திக் கொள்ளலாம். சோலை கண்ணன், பரமசிவம், ராமலிங்கம் மனுக்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஓசீர்கான் மனு பைசல் செய்யப்படுகிறது. இதர மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தரவிட்டார்.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட உத்தரவு பிறப்பித்ததால் தகுந்த உத்தரவிற்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனர். அவரது உத்தரவுப்படி 3 வது நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

அதன்படி மனுக்கள் நீதிபதி ஆர்.விஜயகுமார் முன் விசாரணைக்கு வந்தன. அவர் விசாரணையை ஜூலை 28 க்கு ஒத்திவைத்தார்.

Advertisement