ராணுவம் குறித்து அவதூறு பேசியதாக வழக்கு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்

14

லக்னோ: ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு லக்னோ கோர்ட் ஜாமின் வழங்கியது.


கடந்த 2022ம் ஆண்டு டிச., 16 ம் தேதி, இந்தியா - சீனா இடையே மோதல் நிலவி வந்த காலகட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சூழ்நிலையை மத்திய அரசு முறையாக கையாளவில்லை என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.


அதில், இந்திய ஆயுதப்படையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் ராகுல் கருத்து தெரிவித்ததாக எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதய் சங்கர் ஸ்ரீ வஸ்தவா என்பவர் லக்னோ மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ராகுலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம்,அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு இருந்தது. இதனை எதிர்த்து அவர் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், சம்மனை ரத்து செய்ய ஐகோர்ட மறுத்துவிட்டது.


இந்நிலையில், லக்னோ மாவட்ட நீதிமன்றத்தில், இன்று ராகுல் நேரில் ஆஜரானார். அப்போது, ரூ.20 ஆயிரம் பிணைத்தொகை மற்றும் அதே தொகைக்கு இருவர் இருவரின் பிணையில் ராகுலுக்கு ஜாமின் வழங்கி மாவட்ட நீதிமன்ற கூடுதல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் அலோக் வர்மா ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

Advertisement