மிளகாய் பொடி தூவி, துப்பாக்கியால் சுட்டு இ.கம்யூ., பிரமுகர் படுகொலை; வாக்கிங்கின் போது பயங்கரம்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் குடும்பத்துடன் பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த பிரமுகர் சந்து ரதோட் சுட்டுக்கொல்லப்பட்டார்.



இதுபற்றிய விவரம் வருமாறு;


ஹைதரபாத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பிரமுகராகவும், மூத்த பிரமுகராகவும் இருப்பவர் சந்து ரதோட். நகர் குர்னூல் மாவட்டம் நரசிப்பள்ளி இவரின் சொந்த ஊராகும். இருப்பினும் மலாகேட் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.


சம்பவத்தன்று அவர் தமது மனைவி மற்றும் மகளுடன் மலாகாட் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் நடை பயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது பூங்காவுக்கு வெள்ளை நிற கார் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் 4 பேர் சந்து ரதோட் மீது மிளகாய் தூளை தூவி உள்ளனர்.


என்னமோ அசாதாரணமாக நடக்கிறது என்பதை யூகித்த சந்து ரதோட், அங்கிருந்து உடனடியாக தப்பிச் செல்ல எத்தனித்தார். இதைக் கண்ட மர்ம கும்பல் தாங்கள் கொண்டு வந்திருந்த துப்பாக்கியை நேருக்கு நேராக நீட்டி சரமாரியாக சுட்டுத் தள்ளினர்.


4 குண்டுகள் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சந்து ரதோட் சரிந்து விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த உள்ளூர் போலீசார் உடனடியாக பூங்காவுக்குள் சென்றனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த அவர்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.


முதல்கட்ட விசாரணையில், நிலத்தகராறு, பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னைகளில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும், முழு விசாரணைக்கு பின்னரே அனைத்தும் தெரிய வரும் என்று அவர்கள் கூறி உள்ளனர்.

Advertisement