பயங்கரவாதி நசீரை போலீஸ் சீருடையில் வங்கதேசம் அனுப்ப சதி தீட்டியது அம்பலம்

1

பெங்களூரு : லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி நசீரை போலீஸ் சீருடையில், வங்கதேசம் அனுப்ப கைதான ஏ.எஸ்.ஐ., ஷான் பாஷா திட்டமிட்டு இருந்தது, என்.ஐ.ஏ., விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

பெங்களூரில் 2008ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் லஷ்கர் - இ - தொய்பா அமைப்பின் பயங்கரவாதி நசீருக்கு உதவி செய்ததாக, சிறை ஏ.எஸ்.ஐ., ஷான் பாஷா, சிறை மனநல மருத்துவர் நாகராஜ், பயங்கரவாதி ஜுனைத் அகமது தாய் அனீஸ் பாத்திமா ஆகியோரை, கடந்த 8ம் தேதி என்.ஐ.ஏ., கைது செய்தது.

இவர்களை காவலில் எடுத்து ஆறு நாள் என்.ஐ.ஏ., விசாரணை நடத்தியது. இந்த காவல், நேற்று முன்தினத்துடன் முடிந்தது. மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். ஆறு நாட்கள் மூன்று பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பரபரப்பு தகவல்கள் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து என்.ஐ.ஏ., தரப்பில் கூறப்பட்டதாவது:

கைதான 3 பேரின் மொபைல் போன்களை வைத்து, யாரிடம் பேசினர் என்று ஆய்வு செய்துள்ளோம். பயங்கரவாதி நசீரை நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு ஷான் பாஷாவிடம் இருந்தது. நசீரிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு அவருக்கு ஆதரவாக, ஷான் பாஷா செயல்பட்டுள்ளார்.

நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது, வேன் மீது கையெறி குண்டை வீச வைத்து, அவரை தப்ப வைக்கவும் திட்டம் தீட்டி உள்ளார். இதற்காக தனக்கு தெரிந்த ஒருவர் மூலம், சிவாஜிநகரில் 10 செட் போலீஸ் சீருடையை ஷான் பாஷா வாங்கினார்.

கையெறி குண்டு வீசப்பட்ட பின், நசீரை தப்பிக்க அவருக்கு போலீஸ் சீருடை அணிவித்து கேரளாவுக்கும், அங்கிருந்து மேற்கு வங்கம் வழியாக வங்கதேசம் அனுப்பி வைக்கவும், ஷான் பாஷாவின் திட்டமிட்டுள்ளார். போலீஸ் சீருடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதான மனநல மருத்துவர் நாகராஜ், தன் மனைவி பவித்ரா பெயரில் இரண்டு மொபைல் போன்களை வாங்கி, நசீருக்கு கொடுத்துள்ளார். அந்த மொபைல் போன் மூலம் நசீர், வெளிநாட்டில் இருக்கும் பயங்கரவாதி ஜுனைத் அகமதுவுடன் பேசி உள்ளார். மொபைல் போனை ஆய்வுக்காக தடய அறிவியல் மையத்திற்கு அனுப்பி உள்ளோம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Advertisement