ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக திருட துவங்கிய பட்டதாரி கைது

1

பெங்களூரு : மாதம் ஒரு லட்சம் ரூபாய் ஊதியத்தை விட்டு, ஆடம்பர வாழ்க்கை வாழ, திருட்டில் ஈடுபட்ட பி.டெக்., பட்டதாரி கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு சம்பிகே சாலையில் உள்ள தங்க நகைக்கடைக்கு வாலிபர் ஒருவர் சென்றார். அங்கு நகைகள் வாங்கும் சாக்கில், ஊழியர்களை திசை திருப்பி, 110 கிராம் நகையுடன் தப்பினார்.

சம்பங்கிராம் நகர் போலீசார் விசாரித்தனர். கடையின் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த பின், நகையை திருடியவரை கைது செய்தனர்.

அவர், குடகு மாவட்டம் விராஜ்பேட் நேரு நகரை சேர்ந்த ரிச்சர்ட், 25. பி.டெக்., பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் ஊதியத்துடன் பணியாற்றி வந்தார்.

பி.ஜி.,யில் தங்கி பணிக்கு சென்று வந்த இவருக்கு, இளம்பெண்ணின் நட்பு கிடைத்தது. ஆடம்பரமான பொருட்களை வாங்கி, அப்பெண்ணுக்கு வழங்கி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பணத்தின் மீது ஆசை அதிகரித்தது. ஆடம்பர வாழ்க்கை வாழ நினைத்தார்.

இதற்காக, தான் பணியாற்றி வந்த வேலையை விட்டு, விட்டுத் திருட துவங்கினார். இவரிடம் இருந்து 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 134 கிராம் தங்க நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். இவர் மீது ஒன்பது வழக்குகள் உள்ளன.

Advertisement