ரூ.48.60 லட்சம் மோசடி வழக்கு உ.பி., சிறை கைதிகள் 4 பேர் கைது

அண்ணா நகர், சென்னை நபர்களிடம் 48.60 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய, உ.பி., சிறை கைதிகளை கைது செய்த போலீசார், மீண்டும் சிறையில் அடைத்தனர்.

சென்னையைச் சேர்ந்த அரிபிரகாஷ், நித்யா, சிவராமன், நரேஷ்குமார் ஆகியோர், 'ஆன்லைன் டிரேடிங்' மூலம் வெவ்வேறு வழிகளில், 48.60 லட்சம் ரூபாய் இழந்துள்ளனர்.

இவர்களின் புகாரின்படி, அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர்.

அப்போது, உத்தர பிரதேசம் மாநிலம், நொய்டா போலீசில் சைபர் வழக்கில் சிறையில் இருக்கும் கைதிகளான மோகன் சிங், 33, ஹர்ஷவர்தன் குப்தா, 28, சன்யம் ஜெயின், 26, அர்மான், 30, ஆகியோருக்கு, தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசார், உத்தர பிரதேசம் சென்று விசாரித்தனர். இவர்கள், சென்னையில் பணத்தை இழந்த நான்கு பேரிடமும் மோசடி செய்திருப்பது தெரிந்தது.

இதையடுத்து, நான்கு பேரையும் கடந்த 4ம் தேதி, சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற அனுமதியுடன் உ.பி., சிறையில் இருந்து முறைப்படி கைது செய்தனர்.

விசாரணைக்கு பின், நேற்று மீண்டும் நொய்டா மாவட்ட சிறையிலேயே அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இது குறித்து, அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:

பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கை, வெவ்வேறு வழிகளில் முடக்கி, அதில் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் போன் எண்ணை வைத்து, பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

அதை மற்ற சைபர் குற்றவாளிகளுக்கும் கொடுத்து, 'சைனீஸ் டிராகன்' செயலி வாயிலாக, மொத்த வங்கி கணக்குகளையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட கணக்கில் வரும் பணத்தை, 'கிரிப்டோ கரன்சி'யில் முதலீடு செய்து, இந்திய ரூபாயாக மாற்றி, பிரித்து எடுத்துள்ளனர்.

அந்த வகையில் 153 வங்கி கணக்குகளை கட்டுப்பாட்டில் வைத்து மோசடி செய்துள்ளனர். இதில், சென்னையைச் சேர்ந்த நான்கு பேரின் வங்கி கணக்குகளும் அடங்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement