காமராஜர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல: முதல்வர் ஸ்டாலின்

49


சென்னை: காமராஜர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:
கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்! பெருந்தலைவர் காமராசரைப் 'பச்சைத்தமிழர்' என்று போற்றியவர் ஈ.வெ.ரா., குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் அண்ணாதுரை.

விவாதங்கள்



பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கருணாநிதி. உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு. அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல.

சமூக நீதி



மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும். சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.



காமராஜர் குளிர்சாதன வசதி இல்லாமல் துாங்க மாட்டார். அதற்காக அனைத்து அரசு தங்கும் இல்லங்களிலும் குளிர் சாதன வசதி செய்ய கருணாநிதி உத்தரவிட்டார். அவர் சாகும்போது, கருணாநிதியின் கையை பிடித்து, 'நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்' என திமுக எம்.பி., திருச்சி சிவா பேசியது சர்ச்சையானது.

இதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.


தற்போது அந்த வரிசையில் முதல்வர் ஸ்டாலின், ''காமராஜர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்'' என சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.

Advertisement