திறப்பு விழா கண்ட சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வராத அவலம்



போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட, பழைய போச்சம்பள்ளியில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை சார்பில், 15வது நிதிக்குழு மான்யத்தில் 2023--24-ல், 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், துணை சுகாதார நிலையம் கட்டடம் கட்டப்பட்டது. இதை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். ஆனால் இன்று வரை அக்கட்டடம் சம்மந்தப்பட்ட சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்காமல் உள்ளது. இதனால் திறப்பு விழா கண்டும் பயன்படுத்த முடியாமல், இக்கட்டடம் வெறுமனே காட்சி அளிக்கிறது. பழைய போச்சம்பள்ளியில், வாடகை கட்டடத்தில்தான் சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.


இதுகுறித்து பர்கூர் வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமாரிடம் கேட்டபோது, ''இன்னும் சுகாதார நிலைய கட்டடத்திற்கு மின்சாரம், குடி தண்ணீர் வழங்கவில்லை. இக்கட்டடத்தின் ஒப்பந்ததாரருக்கு கட்டுமான பணிக்கான பில் நிலுவையில் உள்ளதாக கூறி, கட்டட சாவியை வழங்காமல் உள்ளார். உடனடியாக கட்டடம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement