ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி; இதில் என்ன பெருமை என முதல்வருக்கு சீமான் கேள்வி

7


சென்னை:''சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தி.மு.க., ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறது என்கிறார். இதில் பெருமை ஏதும் இருக்கிறதா,'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.


சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான பகுதிநேர ஆசிரியர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்திக்க வந்தார். சீமான் ஆசிரியர்களை சந்திக்க போலீசார் அனுமதி மறுத்தனர். கைது செய்து வைக்கப்பட்டு உள்ள பகுதிநேர ஆசிரியர்களை சந்திக்க தன்னை அனுமதிக்க கோரி சீமான் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் நிருபர்கள், சந்திப்பில், சீமான் கூறியதாவது: தி.மு.க., அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் தான் ஆசிரியர்கள் போராடுகின்றனர். இது எப்படி குற்றமாகும். இந்த குற்றத்தை தூண்டியது யார்? இந்த வாக்குறுதியை கொடுத்தவர் தான் குற்றச்செயலுக்கு காரணம். அவர் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.



அரசு வீடு தேடி அரசு என்று சொல்லி விளம்பரம் செய்கிறது. எத்தனை ஆயிரம் ரூபாய் கோடிகளை கொட்டி, இந்த திராவிட கட்சிகள், ஆட்சிகள் செய்தி அரசியல் தான் செய்யும். சேவை அரசியலோ, செயல் அரசியலோ அவர்களுக்கு தெரியாது. அவர்கள் செய்யவும் மாட்டார்கள். இப்பொழுது வீடு தேடி அரசு என்று சொல்கிறார்கள். என் மக்கள் ரோடு தேடி போராடுவதற்கு வருகிறார்கள். அவ்வளவு பிரச்னை.


சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தி.மு.க., ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறது என்கிறார். இதில் பெருமை ஏதும் இருக்கிறதா? இந்த அரசும், முந்தைய அரசும் மக்களுக்கு ஒரு லட்சம் பிரச்னைகளை கொடுத்து இருக்கிறது. ஒரு லட்சம் போராட்டங்களை அவர்கள் மீது திணித்து இருக்கிறது.


போராடி கொண்டு இருப்பவர்கள், வீதியில் நிற்பவர்கள் யார் என்று யோசிக்க வேண்டும். பெற்றோர் இது தான் உலகத்தை காட்டுகிறார்கள். ஒவ்வொரு பிள்ளையையும் உலகத்திற்கு காட்டுவது ஆசிரியர் பெருமக்கள் தான். இவ்வாறு சீமான் கூறினார்.

Advertisement