கோவை மாநகராட்சி அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு

கோவை:கோவை மாநகராட்சியில் இளநிலை பொறியாளராக பதவி வகித்த விமல்ராஜ், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாநகராட்சி, 80, 81, 83வது வார்டு இளநிலை பொறியாளராக இருந்தவர் விமல்ராஜ். இவர், ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்குவதாக, லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் சென்றது. வ.உ.சி., பூங்கா வளாகத்தில் உள்ள வார்டு அலுவலகத்தில் ஆய்வு செய்தபோது, 1 லட்சத்து, 2100 ரூபாய் கைப்பற்றப்பட்டது.

இவர் மீது மாநகராட்சி நிர்வாகம் துறை ரீதியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக, கோவையில் இருந்து விடுவிக்கப்பட்டு, கடலுார் மாநகராட்சிக்கு மாற்றப்பட்டார். அங்கு, அவர் தற்போது தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிகிறார். இது, சந்தேகத்தை வலுப்படுத்தியது. இதையடுத்து, விசாரணையை லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிரப்படுத்தினர்.

இதில், 2020 ஏப்., 1 முதல், 2024 ஜூலை 31 வரையிலான காலகட்டத்தில், அவர் ஈட்டிய வருமானத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தினர். 2020 ஏப்., 1 அன்று, விமல்ராஜ், அவரது தாய், சகோதரி ஆகியோரது பெயர்களில், 23 லட்சத்து, 75,846க்கு சொத்து இருந்தது. 2024 ஜூலை 31 அன்று, இம்மூவரின் பெயர்களில், 1 கோடியே 8 லட்சத்து, 96,712 ரூபாய்க்கு சொத்து இருப்பது கண்டறியப்பட்டது.

பரிசோதனை காலகட்டத்தில், சட்டப்பூர்வமாக, 37 லட்சத்து, 72,841 ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார்.

இதில், குடும்ப செலவுக்காக, 21 லட்சத்து, 31,541 ரூபாய் செலவிட்டிருக்கிறார். மூவரின் பெயரில், 16 லட்சத்து, 41,300 ரூபாய் சேமிப்பு இருக்கிறது. இறுதியாக, 68 லட்சத்து, 79,566 ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அதிகமாக சேர்த்திருப்பது கண்டறியப்பட்டது.

மாநகராட்சியில் கீழ்மட்ட பணியாளராக இருந்தபோதிலும், 68 லட்சத்து, 79,566 ரூபாய்க்கு சொத்து சேர்த்திருப்பது, வருவாயை விட, 182 சதவீதம் அதிகம்.

இது, ஊழல் தடுப்பு சட்டத்த்தின் கீழ் குற்றம். அதனால், விமல்ராஜ் மீதும், அவரது தாய் கமலா, சகோதரி திவ்யா ஆகியோர், சட்ட விரோதமாக சொத்து சேர்க்க துாண்டுதலாக இருந்ததற்காக, அவர்கள் மீதும் கோவை ஊழல் தடுப்பு

மற்றும் கண்காணிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் எழிலரசி வழக்கு பதிந்துள்ளார்.

இதன் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட முதன்மை நீதிபதிக்கு எப்.ஐ.ஆர்., நகல் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement