பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்; 4பேர் கைது

1

திருச்சி : திருச்சி மாநகராட்சி தி.மு.க., பெண் கவுன்சிலரை தாக்கிய வழக்கில், 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.


திருச்சி மாநகராட்சி, 64வது வார்டு தி.மு.க., கவுன்சிலராக மலர்விழி உள்ளார். இவரது வார்டில் கழிவுநீர் சாக்கடை அமைப்பது தொடர்பாக, ஒப்பந்தக்காரர் வேல்முருகன் தரப்புக்கும், மலர்விழி தரப்புக்கும் பிரச்னை இருந்தது.


இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, எல்.ஐ.சி., காலனியில் உள்ள கவுன்சிலர் மலர்விழி வீட்டுக்குள் புகுந்த, 30க்கும் மேற்பட்டோர், வீட்டை சூறையாடி, கார், பைக்கை உடைத்து, கவுன்சிலர் மலர்விழி உள்ளிட்ட, மூன்று பெண்களை தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர். மூன்று பெண்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதை கண்டித்து, கவுன்சிலர் மலர்விழியின் மகனும், அப்பகுதி தி.மு.க., வட்டச் செயலருமான ஆனந்த் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.



இதுகுறித்து கவுன்சிலர் மலர்விழி கூறுகையில், ''ஆளுங்கட்சி கவுன்சிலருக்கே பாதுகாப்பு இல்லை; வீடு புகுந்து தாக்குகின்றனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை,'' என்றார்.

இந்நிலையில், மலர்விழி கொடுத்த புகாரின் படி, ஒப்பந்தக்காரர் வேல்முருகன் உட்பட, 20 பேர் மீது கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து, அதில், நான்கு பேரை கைது செய்துள்ளனர்.


இதில் ஒப்பந்தக்காரர் வேல்முருகன், முத்தரையர் சங்கத் தலைவர் விஸ்வநாதனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement