'தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., விசாரணைக்கு தயார்'

மைசூரு: ''தர்மஸ்தலா வழக்கில் காவல் துறை கேட்டுக் கொண்டால், எஸ்.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட தயார். எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை,'' என, முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார்.

கர்நாடக மாநிலம், மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக, தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலின் முன்னாள் ஊழியர் புகார் அளித்துள்ளார்.

இதன்படி, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோபால கவுடா உள்ளிட்டோர் என்னிடம் கோரிக்கை வைத்தனர்.

புகார் குறித்து தர்மஸ்தலா போலீசார் விசாரிக்கின்றனர். போலீசார் தாக்கல் செய்யும் அறிக்கையில், சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று பரிந்துரை இருந்தால், விசாரணைக்கு உத்தரவிட தயார்.

நீண்டகாலம் தலைமறை வாக இருந்த கோவில் முன்னாள் பணியாளர், பல ஆண்டுகளாக உடல்களை புதைத்ததாக தற்போது கூறி உள்ளார்.

போலீசார் என்ன சொல்கின்றனர் என்று பார்க்கலாம்.

இந்த வழக்கில் அரசுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. இவ்விஷயத்தில், யாருடைய பேச்சையும் நாங்கள் கேட்க மாட்டோம்; சட்டப்படி விசாரணை நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement