மண்டைக்காட்டில் கோஷ்டி மோதல்: 30 பேர் மீது வழக்கு

நாகர்கோவில்,: மண்டைக்காடு அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், 10 பேர் படுகாயம் அடைந்ததனர். இது தொடர்பாக, 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருகே புதுார் சி.ஆர்.எஸ்., நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஆன்டனிக்கும் இடையே தேவாலய திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள குருசடி அருகே, ஸ்டீபன் - ஆன்டனி தரப்பினர், 50க்கும் மேற்பட்டோர் கூடினர்.

அப்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவரையொருவர் அரிவாள், கம்பி போன்றவற்றால் தாக்கிக் கொண்டனர்.

இதில் படுகாயமடைந்த 10 பேர், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மோதல் தொடர்பாக, இரு தரப்பைச் சேர்ந்த 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement