ரஷ்யாவில் பயிலும் தமிழக மாணவரை போருக்கு அனுப்ப கட்டாய பயிற்சியா? மகனை மீட்க பெற்றோர் கோரிக்கை

1

சேத்தியாத்தோப்பு: ரஷ்யாவில் மருத்துவம் படிக்க சென்ற சேத்தியாத்தோப்பு வாலிபர், தன்னை உக்ரைன் போருக்கு அனுப்ப, அந்நாட்டு போலீசார் வலுக்கட்டாயமாக பயிற்சி அளிப்பதாக, அவரது பெற்றோருக்கு அனுப்பிய ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை கீழ்பாதியை சேர்ந்தவர் சரவணன் மகன் கிஷோர், 23; இவர், 2021ல் மருத்துவம் படிக்க ரஷ்யா சென்றார். இவரும், சேலம் மாவட்டம், எடப்பாடியை சேர்ந்த நித்திஷ் மற்றும் மூன்று ரஷ்ய மாணவர்களும் அறையில் தங்கி படித்தனர்.


ஐந்து பேரும், 'கூரியர்' நிறுவனத்தில் பகுதி நேர வேலைக்கு சேர்ந்தனர். 2023 மே, தடை செய்யப்பட்ட பொருட்களை டெலிவரி செய்ததாக, ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


இதுகுறித்து, கிஷோரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது பெற்றோர், கிஷோருக்கு முன்ஜாமின் பெற ஏற்பாடு செய்து வருகின்றனர்.


இந்நிலையில், கிஷோர், தன் பெற்றோருக்கு ஒரு ஆடியே அனுப்பியுள்ளார். அதில், 'தடை செய்த பொருட்களை டெலிவரி செய்ததாக கைதான ஐந்து பேரில், மூன்று ரஷ்ய மாணவர்களை போலீசார் விடுவித்தனர். தன்னையும், நித்திஷ் என்பவரையும் அழைத்து சென்று தனி அறையில் பூட்டி சித்ரவதை செய்தனர். ஆவணங்களில் கையெழுத்து பெற்று, கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். உள்நாட்டில் நடந்து வரும் உக்ரைன் போருக்கு வலுக்கட்டாயமாக தங்களை அனுப்ப, போலீசார் பயிற்சி அளித்து வருகின்றனர்' என, கூறியுள்ளார்.


அதிர்ச்சியடைந்த பெற்றோர், தமிழக அரசு இப்பிரச்னையில் தலையிட்டு, இந்திய துாதரகம் மூலமாக மகனை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement