தமிழுக்கு தினமும் ஒரு 'மலர்' தந்த மகான் டி.வி.ராமசுப்பையர்

13

தாய் மொழி கல்வியின் அவசியம் பற்றி, தற்போது அதிகம் பேசுகிறோம். குழந்தைகள் ஆரம்ப கல்வியில் தமிழை கற்க வேண்டும்; ரஷ்யாவிலும், ஜப்பானிலும், சீனாவிலும் இருப்பதை போல மருத்துவம், பொறியியல் படிப்புகள், தாய்மொழி தமிழில் சிறக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

இதை தீர்க்க தரிசனமாக, தொலைநோக்கு பார்வையுடன், 75 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியும், பேசியும் வந்தவர், டி.வி.ஆர்., என அழைக்கப்படும், 'தினமலர்' நாளிதழின் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர்.

அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இணைந்திருந்த அன்றைய நாஞ்சில் நாடான, இன்றைய குமரி மாவட்டத்தை, தாய் தமிழகத்தோடு இணைக்கும் போராட்டத்திற்காக பத்திரிகை துவங்கி, அந்த லட்சியத்தை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியவர் டி.வி.ஆர்.,

குமரி மாவட்டம் உருவான வரலாற்றில், டி.வி.ஆர்., பெயர் என்றும் நீங்காது நிலைத்திருக்கும். அதே நேரத்தில், ஆழ்ந்த தமிழுணர்வு மிக்க டி.வி.ஆர்., தமிழும் தமிழனும் ஒரு சேர தலைநிமிர்ந்து முன்னேற வேண்டும் என்ற கொள்கையோடு எழுத்தால் போராடியவர் என்பதை, தமிழ் வரலாற்றின் பக்கங்கள் வசதியாக மறந்து விட்டது வருத்தமான விஷயமே.

அவர் படைப்பிலக்கியவாதி அல்லாமல் இருக்கலாம்; ஆனால் தமிழுக்காக, தமிழருக்காக ஒரு பத்திரிகையை படைத்தவர் என்பதை பத்திரிகை உலகம் மறக்காது!

போராட ஒரு நாளிதழ்



திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகர், மலையாளம் ஆதிக்கம் செலுத்திய திருவனந்தபுரத்தில், ஒரு தமிழ் நாளிதழை துவங்கும் துணிச்சல் யாருக்கு வரும்? ஆனால், அவருக்கு இருந்தது. அங்கிருந்து நாளிதழ் வெளிவந்தால், தமிழர்களின் போராட்டக்குரல் ஆட்சியாளர்களுக்கு எளிதில் கேட்கும் என்று எண்ணினார்.

நாளிதழ் துவக்க விழாவிற்கு திருவிதாங்கூர் சமஸ்தான முதல்வர் கேசவனை அழைத்த போது, 'மலையாள மண்ணில் தமிழ் பத்திரிகையா?' என, அவர் பங்கேற்க மறுத்து விட்டார். பின்னர், தமிழறிஞர் வையாபுரி பிள்ளை தலைமையில் நாளிதழ் வெளியிடப்பட்டது.

தன் ரத்தத்தில் ஊறியிருந்த தமிழ்ப்பற்றை நாளிதழுக்கு பெயர் வைப்பதிலும் உறுதிபட காட்டினார் டி.வி.ஆர்., யாரிடமும் யோசிக்கவில்லை. நேராக அவருடைய தமிழாசிரியர் தசாவதானி ஆறுமுகம் பிள்ளையை சந்தித்து யோசனை கேட்டார்.

இதுகுறித்து டி.வி.ஆர்., ஒருமுறை...

@quote@ 'பொன்மலர் என பெயர் வைக்கலாம் என்று தமிழாசிரியர் கூறினார். ஆனால், நாளிதழ் என்பது பெயரிலேயே இருக்க வேண்டும் என்பதால் தான் தினமலர் என்று பெயரிட்டேன்' என, குறிப்பிட்டுள்ளார். -எவ்வளவு தீர்க்கதரிசனம்; எவ்வளவு தமிழ்ப்பற்று இருந்தால் இப்படி பெயர் வைத்திருப்பார். quote

தினமும் மலர்வது



'மலர்' என்பது அழகான துாய தமிழ் வார்த்தை. கம்பனும், வள்ளுவனும் வாக்கியங்களுக்குள் கலந்து வைத்து விளையாடிய வார்த்தை 'மலர்!' அது 'தினமும் மலர்வது' என பெயரால் உணர்த்தப்பட வேண்டும் என, தீர்க்கமாக சிந்தித்திருக்கிறார். எழுத்திலும், பேச்சிலும் பிறமொழி கலப்பு அதிகமாக இருந்த அன்றைய காலகட்டத்தில், சில பத்திரிகைகளே துாய தமிழ் பெயரில் வந்து கொண்டிருந்தன என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

மலர் மலர்ந்த பிறகு தினமலர் நாளிதழ் மட்டுமல்ல, பிற பத்திரிகைகளும் தங்களது இணைப்பு பக்கங்களில், மலர் என்ற வார்த்தையை சேர்க்க தவறவில்லை. மகாகவி பாரதியார் காலத்தில் இதழியலில் பத்திரிகை, சஞ்சிகை என்ற வார்த்தைகளே அதிகம் புழங்கிக் கொண்டிருந்தன. மலரில் இதழ்கள் இருப்பது போல, பிற்காலத்தில் நாளிதழ் என்ற அருமையான சொல்லிற்கும் மலர் ஒரு காரணமாயிற்று போலும்!

தமிழ்வழி கல்வி



அன்றைய நாஞ்சில் நாட்டு மக்கள் தமிழை தாய்மொழியாக கொண்டிருந்தாலும், அது மலையாள நாட்டோடு இணைந்திருந்ததால், மலையாள வழியில் கல்வி கற்றனர். ஆரம்ப பள்ளிகளில் கூட தமிழ் மொழி அவ்வளவாக இல்லை.

இந்த நிலை மாற வேண்டும் என்று நினைத்த டி.வி.ஆர்., தமிழ் வழி பள்ளிகளின் அவசியம் குறித்து செய்திகள் வெளியிட்டார். திவான் சர்.சி.பி.ராமசாமி ஐயர் கொண்டு வந்த கட்டாய கல்வி திட்டத்திற்கு அனைத்து உதவிகளும் செய்து, புதிய பள்ளிகள் நிறுவ காரணமானார்.

குமரி மாவட்டம், தாய்த்தமிழகத்தோடு இணைந்த பிறகு, அம்மாவட்ட மக்கள் முழுமையாக தமிழ் கல்விக்கு மாற வேண்டும்; தமிழ் எழுத்தாளர்களும் அங்கு கவனம் செலுத்த வேண்டும்; அங்கிருந்து படைப்பாளிகள் உருவாக வேண்டும் என்பதற்காக, தமிழ் எழுத்தாளர்களின் மாநில மாநாட்டை நாகர்கோவிலில், 1958ல் நடத்தினார் டி.வி.ஆர்.,

அந்த மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவராக இருந்த டி.வி.ஆர்., நிகழ்த்திய உரை, தமிழுலகில் பொன்னெழுத்துக்களால் வரையப்பட வேண்டிய பொக்கிஷம்.

அதில் சில வரிகள்...



'தமிழ் எழுத்தாளர்கள், பாரதத்தின் இதர மொழி எழுத்தாளர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல. புதிய படைப்பில், மொழி பெயர்ப்பில், தழுவலில் தமிழ் வேகமாக முன்னேறி வருகிறது. உலகமொழிகளை கற்றுக்கொண்டு அவற்றின் சாரத்தை தமிழில் கொண்டு வர வேண்டும்.

'விஞ்ஞானத்தில், ஆங்கிலத்தை விட ரஷ்ய மொழி முன்னேறி விட்டது. ரஷ்ய மொழியை கற்று விஞ்ஞான அறிவை தமிழில் வளர்க்க வேண்டும். வடமொழியில் எத்தனையோ தமிழ்ச்சொற்கள் உள்ளன. தமிழை உலகப்பெருமொழிகளில் ஒன்றென ஆக்குவது நம் கடமை!' - தினமலர், ஜூன் 1, 1958.

'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்

இறவாத புகழுடைய புதுநுால்கள்

தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்'

என்ற மகாகவி பாரதியின் வார்த்தைகளுக்கு வலு சேர்ப்பதாக டி.வி.ஆரின் சிந்தனையும், எழுத்தும், பேச்சும் இருந்தன.

தமிழர்கள் கட்டாயம் தமிழை கற்க வேண்டும் என விரும்பிய டி.வி.ஆர்., அதே நேரத்தில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மொழிகளை தெரிந்து கொள்வது அவசியம் என்று எப்போதும் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு என்று தனிப்பெயர்



மெட்ராஸ் மாநிலம், 1968ல் அண்ணாதுரை முதல்வராக இருந்த போது, 'தமிழ்நாடு' என பெயர் மாற்றம் பெற்றது. இதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே, தமிழர்களின் கலை, பண்பாடு, கலாசாரம் முன்னேற தமிழ்நாடு என தனிப்பெயர் வேண்டும் என்று தொடர்ந்து எழுதியவர் டி.வி.ஆர்.,

தினமலர் நாளிதழ் தலையங்கத்தில், 1958ல் டி.வி.ஆர்., எழுதியது...

'அரசு அலுவல் மொழி, தமிழாக மாறிவரும் இக்கட்டத்தில், மாநிலத்தின் பெயரை மட்டும் 'தமிழ்நாடு' என்று மாற்றாமல் இருப்பதில் என்ன நியாயம். தமிழ்நாடு என்று பெயர் ஏற்படும் போது தான் தமிழர்களுக்கும், தமிழுக்கும் இயற்கையான பெருமிதம் ஏற்பட முடியும். அரசு இனியும் வீண் சடங்குகளுக்கு வழி வகுக்காமல், தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்கு முன்வருமா' என்றார்.


@block_Y@

தமிழ் ஆர்வலர்



டி.வி.ஆர்., தேசபக்தி மிக்கவர்; தேசவிரோத சக்திகளை துணிச்சலோடு எதிர்த்தவர். ஒருமைப்பாட்டு உணர்வோடு ஜாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட சிந்தனைவாதியாக திகழ்ந்தவர். என்றாலும் தாய்மொழி என வரும் போது, தன்னிகரில்லா தமிழ் ஆர்வலராக வாழ்ந்து, தன் நாளிதழ் மூலம் தமிழ் வளர்த்தார் என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் மறக்கலாகாது!block_Y

தமிழுக்கு தினமும் ஒரு 'மலர்' தந்த மகான் டி.வி.ஆர்., நினைவு தினம் இன்று, ஜூலை 21.


ஜி.வி.ரமேஷ் குமார், பத்திரிகையாளர்



rameshkumargv@dinamalar.in

Advertisement