எதையும் சமாளிக்க முடியும் என்பதே டி.வி.ஆர்., கொள்கை

மறைந்த திருமதி கிருஷ்ணம்மாள் டி.வி.ஆர்., தன் கணவரான 'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பற்றி கூறியதாவது: (டி.வி.ஆர்., வாழ்க்கை வரலாற்றை சொல்லும் 'கடல் தாமரை' புத்தகத்தில் இருந்து தொகுத்தது)
டி.வி.ஆர்., குழந்தை பருவம் முதலே, மகா புத்திசாலி. விளையாட்டு, நீச்சல் என எல்லாவற்றிலும், அவர் தான் முதல். மிகவும் நேர்மையானவர், கணக்கு பாடத்தில் புலி.
என் தந்தைக்கு நான் ஒரே மகள்; ஆகவே பார்த்து பார்த்து இவரை மணமகனாக தேர்ந்தெடுத்தனர். இவரும் நல்ல மாப்பிள்ளையாகவே இருந்தார்.
என் ஐந்து மகன்களும், நாகர்கோவில் என்.எல்.பி.,யில் தான் படித்தனர். பின், காரைக்குடி, சென்னை என ஆங்காங்கே சென்று படித்தனர். பிள்ளைகள் என்ன படிக்கின்றனர், எப்படி படிக்கின்றனர் என்று அவர் கேட்டதே இல்லை. அதை செய், இதை செய் என்று கூறியதுமில்லை; ஒரு நாளும் கோபித்ததும் இல்லை. பிள்ளைகள் கடுமையாக படித்து, கல்லுாரிகளில் முதல் மாணவர்களாக வந்தனர்.
அவருக்கு ஏகப்பட்ட வேலைகள். என்னென்ன பொதுக்காரியங்களில் ஈடுபட்டுள்ளார்; எவ்வளவு பணம் செலவு செய்துள்ளார் என்பதை பற்றி, ஒரு வார்த்தை கூட, என்னிடமோ, வேறு யாரிடமோ அவர் சொன்னதே இல்லை; நாங்களும் கேட்டதில்லை. குடும்பத்தில் யார் விஷயத்திலும், அவர் தலையிட்டது இல்லை; அவர் விஷயத்திலும் குடும்பத்தினர் யாரும் தலையிட்டது இல்லை.
அவர் அப்பழுக்கில்லாதவர், மகாபுத்திசாலி என்பதால், அவர் எது செய்தாலும் ரொம்ப யோசித்து சரியானதையே செய்வார் என்பதால், நான் எப்போதும் நிம்மதியாகவே இருந்தேன்.
அரிஜனங்கள் மீது மிகவும் பிரியமும், அனுதாபமும் அவருக்கு உண்டு. அவர்கள் படித்து முன்னுக்கு வரவேண்டும் என மிகவும் ஆசைப்பட்டார். இதற்காக அன்றைய கல்வி இலாகா டைரக்டர் ஏ.என்.தம்பியும், இவரும் சேர்ந்து, ஊர் ஊராகச் சென்று பள்ளிக்கூடம் உருவாக்கினர்; படித்த அரிஜன மாணவர்களுக்கு வேலையும் வாங்கிக் கொடுத்தார் இவர்.
'தினமலர்' நாளிதழ் ஆரம்பித்த போது நிறைய நஷ்டம் வந்தது; ஆனால், அதை ஒரு நாளும் சொன்னதே இல்லை; அதுபற்றி கவலைப்பட்டதும் இல்லை. தன்னால் இதை சரிசெய்ய முடியும் என்று திடமாக நம்பினார். அவர், ஒரு முடிவு எடுத்துவிட்டால், பிறகு நஷ்டத்தைப் பற்றி கவலைப்பட மாட்டார்.
திருவனந்தபுரத்தில் அன்றைய முதல்வர், பட்டம் தாணுப்பிள்ளையின் மூலம் பெரிய நெருக்கடிகள் வந்தன; கோர்ட்டுக்கு இழுத்தடித்தனர். ஜெயிலில் கூட தள்ளப் பார்த்தனர்.
ஆனால், அது பற்றி அவர் கவலைப்பட்டதே இல்லை. தனக்கு யாராலும், எந்தவிதமான ஆபத்தும் விளைவிக்க முடியாது என்ற நம்பிக்கை அவருக்கு எப்போதும் உண்டு. எது வந்தாலும் வரட்டும் பார்த்துக் கொள்வோம் என்று இருப்பாரே தவிர, அதைப்பற்றி வீட்டில் காட்டிக் கொள்ளமாட்டார்.
இருப்பினும், என்னிடம் சொல்லி கவலைப்பட்ட ஒரு விஷயம் உண்டு என்றால், அது, 'நாஞ்சில் நாட்டில் தமிழ் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்; தாங்க முடியாத துன்பம் அனுபவிக்கின்றனர்; அவர்கள் தமிழ்நாட்டுடன் சேர்ந்தால் தான் நிம்மதி' என்று, அவர்கள் கஷ்டத்தை பற்றித்தான் பகிர்ந்திருக்கிறாரே தவிர, தன் கஷ்டம் என்று எதையுமே சொன்னதில்லை.
மகன் கிருஷ்ணமூர்த்தி, இரண்டு ஸ்டேட் பர்ஸ்ட். இவருக்கு இருந்த செல்வாக்கில், மகனை எளிதாக மருத்துவக்கல்லுாரியில் சேர்த்து மருத்துவராக்கிஇருக்கலாம்; ஆனால், அவர் அப்படி செய்யவில்லை.
அவரைக் கண்டு நான் எப்போதுமே பயந்தது இல்லை. அறுபது ஆண்டுகள் கூடவே இருந்திருக்கிறேன்; ஒரு நாள் கூட கடிந்து கொண்டது இல்லை. சந்தோஷமாகவே இருந்தேன்.
பிள்ளைகள் திருமணம் விஷயத்தில், அவரது போக்கே தனி. அவருக்கு ஜாதகங்களில் நம்பிக்கை கிடையாது. ஒரு கல்யாணத்திற்கும் ஜாதகம் பார்த்தது இல்லை; வரதட்சணை கேட்டதும் இல்லை. வீட்டுக்கு வரும் மருமகள், அவரது குடும்பம் பிடித்திருந்தால் போதும்; கல்யாணம் நடந்து விடும். அவர், தான் எடுத்துக் கொண்ட காரியங்களில், மிகவும் நம்பிக்கை கொண்டு செயல்படுவார். சோர்வு என்பதே கிடையாது.
எப்போதும் நாஞ்சில் நாடு பற்றியும், அதன் முன்னேற்றம்பற்றியும் தான் சிந்தனை. நாஞ்சில் நாடு, தமிழகத்துடன் இணைந்தபோது மிகவும் சந்தோஷப்பட்டார்.
எத்தனையோ பெரிய மனிதர்கள் பழக்கம் உண்டு. ஆனால், அதற்காக கர்வம் கொண்டதில்லை.
ஜாதி, மதம், உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை என்ற எந்தப் பாகுபாடும் இவருக்கு கிடையாது. நம்மால் முடிந்ததை வஞ்சகமில்லாமல் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதே அவரது கொள்கை; அப்படியே வாழ்ந்த மனித நேய மாமேதை
- -எல்.முருகராஜ்
-பத்திரிகையாளர்
murugaraj@dinamalar.in.

மேலும்
-
அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக்!
-
அரசியல் பிரச்னைகளில் அமலாக்கத்துறையை பயன்படுத்தக் கூடாது: சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
-
வங்கதேச விமானப்படை ஜெட் விமானம் பள்ளியில் விழுந்து நொறுங்கியது; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்