4 மாவட்டங்களில் இன்று கனமழை

சென்னை: 'கோவை, நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

அதன் அறிக்கை: நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், 8; வேலுார் மாவட்டம் காட்பாடி, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தலா, 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் மீது, ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, இடி, மின்னல் மற்றும் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யலாம்.



@twitter@https://x.com/dinamalarweb/status/1947097517579190440twitter

கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரியில் சில இடங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.



தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில், இன்றும், நாளையும், மணிக்கு, 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே மணிக்கு 60 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement