காவிரி ஆற்றில் மூழ்கி 3 நர்சிங் மாணவர்கள் பலி

மைசூரு : காவிரியில் குளிக்க சென்ற நர்சிங் கல்லுாரி மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மாண்டிய அரசு மருத்துவ கல்லுாரியில் பி.எஸ்.சி., நர்சிங் படித்து வந்த ஹாவேரியின் கிருஷ்ணா, 21, சாம்ராஜ்நகர் சாந்தேமரஹள்ளியின் சித்தேஷ், 22, மைசூரு பிரியபட்டணாவின் பிரசாந்த், 21, உட்பட ஆறு பேர் விடுமுறை நாளை கொண்டாட முடிவு செய்தனர்.

அதன்படி, நேற்று காலை இரு சக்கர வாகனத்தில் மைசூரு மாவட்டம், மீனாட்சிபுரா கிராமத்திற்கு வந்தனர்.

கிராமத்தின் அருகில் காவிரி ஆறு ஓடுகிறது. இதில் குளிக்க, மாணவர்கள் ஆறு பேரும் இறங்கினர். அப்போது, ஆழம் தெரியாமல் சென்ற ஒருவர் தத்தளித்தார். இதை பார்த்த மற்றொரு மாணவர், அவரை காப்பாற்ற முயன்றார். இருவரும் தத்தளிப்பதை பார்த்த மூன்றாவது நண்பர், அவர்களை காப்பாற்ற முயற்சித்தார்.

ஆழமான பகுதிக்கு சென்றதாலும், நீரின் வேகமும் அதிகமாக இருந்ததாலும், மூவரும் நீரில் மூழ்கினர். இதை பார்த்த மற்ற மூன்று மாணவர்கள் கூச்சலிட்டனர். கிராமத்தினர், இளவாலா போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த தீயணைப்பு படையினர், நீரில் மூழ்கிய மூன்று மாணவர்களை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மாலையில் மூவரின் சடலங்களையும் தீயணைப்பு படையினர் மீட்டனர்.

Advertisement